Monday, 28 December 2015

சிவ ஸ்தோத்திரம்

எல்லாவுலகங்களுக்கும் தலைவனே ! ஞான சொருபியே ! முதற்காரணனே! திரிகரணங்களுக்கும் எட்டாதவனே ! உனக்கு வெற்றி உண்டாகுக!
சமான ரஹிதனே! எண்ணுதற்கரியவனே! முழு மங்கல் சொரூபியே! தாணுவே காரண ரஹிதனே! பரமானந்த ஸ்வரூபியே! ஆனந்த காரணனே ! ஈஸ்வரனே! தலைவனே!. திருவருள் சொரூபனே!. உனக்கு ஜயமுண்டாகுக! சர்வாண்டங்களிலும் வியாபித்து இருப்பவனே! யாவற்றுக்கும் மேலானவனே! உனக்கும் மேலாக ஒன்றும் இன்றும் இல்லாதவனே! அழிவில்லாதவனே!. உற்பத்தியில்லாதவனே மாயா அதிதனே!  இந்த பூஜையை அடியேன் செய்ததனால் அடையும் பயனை எளியேன் அடையும்படி திருவருள் செய்யவேண்டும்!

உலகங்கள் யாவற்றுக்கும் தாயாகி உள்ளவளே1 உலக சொரூபியானவளே! பேரழகுடையவளே! மனதில் உண்டாகும் அஞ்ஞானத்தை ஒழிப்பவளே. எல்லா சமயங்களுக்கும் தலைவியே! குணஸ்வரூபியானவளே! நிர்குணஸ்வரூனியே! ஞானிகள் இதயத்தில் எழுந்தருளி இருப்பவளே! ஜய! ஜய! சர்வலோகங்களுக்கும் தலவனான சிவபெருமானுடைய மனைவியாக விளங்குபவளே! தேவர் முதலிய யாவரும் துதி செய்யப் பெற்றவளே! உலகத்தை படைப்பவளே! மங்கலங்களையெல்லாம் உண்டாக்குபவளே! உன்னுடைய திருவடியை என் இதயத்தில் இருத்தி என் ஆவலால் துதித்து என் சிரத்தால் பணிகிறேன்! தேவீ உன்னிடத்திலேயே சர்வாண்டங்களும் லயமடைகின்றன. சூலாயுதம் ஏந்திய எந்தையாகிய சிவபெருமான் உன்னையன்றி பயன் அளித்ததும் இல்லை. ஆகையினால் அண்ட கோடியுள்ள ஆன்மாக்கள் யாவும் உன்னுடைய திருவடிகளுக்கே பணி செய்யும். உன்னுடைய திருவருளை எனக்குத் அருள் செய்ய வேண்டும்வேண்டும்!

ஐந்து திருமுகங்களும் பத்துத் திருகரங்களும் ஸ்படிக நிறமும் உடைய அக்ஷ்ர ரூபியும், பிரம்ம ரூபியும், கலா ரூபியும் ஆகிய சகல நிஷ்கள் வடிவமைந்த சிவமாய் சாந்தியாதீதத்தில் அமர்ந்தருளிய சதாசிவ மூர்த்தி நன்றாக திருவருள் புரிவார். ஆகையால் அப்பெருமானின் திருத்தொடையின்மீது இச்சாசக்தி வடிவமாக பொருந்தி யாவற்றுக்கும் தாயாகி உள்ளவளே, என்னை பாவங்கள் அணுகாதவாறு விலக்கி அழியாத உயர் பதவியை தந்தருள வேண்டும். ஜடா முடியை உடைய சங்கர பகவானும் பர்வத ராஜ புத்திரியாகிய உமா தேவியாரும் அன்புடையவர்களாய் திருவாய் மலர்ந்தருளும் சிவஞானம் ஆகிய இனிய அமுதத்தை அருந்தும் , பிரம்ம தேவனும் திருமாலும் பணிந்து துதி செய்ய விளங்கும் வினாயகக்கடவுளும் முருகக்கடவுளும் எனக்கு திருவருள் செய்ய வேண்டும்!

ஒளிவீசும் ஸ்படிக நிறமுற்று , அடியவர்கள் செய்யும் துதியையே ஆபரணமாக ஏற்கும் சதாசிவ வடிவமாய் சூரியன் போன்ற நிறம் அமைந்த பகவன் சிரோ மூர்த்தியாய் கூறப்பட்டு சாந்தியாதீத பதமாய் விண்ணிடை பொருந்தி அளவிடுவதற்கரிய பஞ்சாட்சரங்களில் இறுதியில் உள்ள யகராஷ்ரமாகிய, ஐந்து தலைகளுடன் கூடி அறிவதற்கு அறியதாய் விளங்கும் ஈசான பிரம்மம் உமாதேவியுடன் அடியேன் பூஜை செய்வதற்கு திருவுளம் இறங்கி என் பாவங்களை அகற்றியருள வேண்டும்! 

பாலசூரிய வடிவமாய் விளங்கி தன்னருள் புரியும் சிவபெருமானின் கீழ் திசை முகமாகி சாந்தீபதமாய் ஆன்மாவாய் வாயுவில் வசிப்பதாய் , பஞ்சாட்சரங்களில் நான்காவதாகிய வாகாராட்சரமாய் நான்கு தலைகளுடன் கூடியமர்வதுமாய் விளங்கும் தற்புருஷ பிரம்மம் நெடிய கண்களையுடைய உமாதேவியுடன் கூடி அடியேன் மலர்தூவி அர்ச்சித்த பூஜைக்கு மனமகிழ்ந்து , என் மன மயக்கத்தை அறவே ஒழித்து மகிழ்ச்சியுடன் திருவருள் செய்ய வேண்டும்! 

அஞ்ஞன கிரி போன்ற ஆதாரம் உடையதாய் ஈஸ்வரனது தெற்கு முகமாகி கொடுமை வாய்த்த அகோர மூர்த்தியாய் வித்தியாப்தமாய் அக்கினியில் பொருந்தியதாய் பஞ்சாட்சரங்களில் மூன்றாவதாகிய சிகாராட்சரமாய் எட்டுத் தலைகளுடன் விளங்குவதாக உள்ள அகோர பிரம்மம் எளியேனுடைய குற்றங்களை மன்னித்து உமாதேவியாருடன் என் பூஜையை ஏற்று மகிழ்ந்து என் பாவங்களையெல்லாம் ஒழித்து திருவருள் புரிய  வேண்டும்.!

குங்கும நிறமுடையதாய் ஈஸ்வரனது வடக்கு முகமாய் பிரதிஷ்டாபதமுடையதாய் ஜலத்தில் விளங்குவதாய் பஞ்சாட்சர்களில் இரண்டாவதாகிய மகாராடசரமாய் பதிமூன்று தலைகளுடன் விளங்கும் வாமதேவ பிரம்மம் உமாதேவியாருடன் பொருந்தி அடியேன் புல்லறிவால் செய்த பூஜைக்கு மனங்களித்து என் பாபமாகிய கோடையை தணித்து அமுதமாரியை பொழிந்து என்னை கடைத்தேற்ற வேண்டும். 

தங்கம் போன்ற வண்ணமுடையதாய் சங்கு குண்டலங்கள் அணிந்த சிவபெருமானின் மேற்றிசை முகமாய், நிவர்த்தி பதமுடையதாய் பூமியில் விளங்குவதாய் பஞ்சாட்சரங்களில் முதல் எழுத்தாகிய நகாராட்சரமாகி எட்டுத்தலைகளுடன் விளங்கும் சத்தியோஜாத பிரம்மம் உமாதேவியுடன் பொருந்தி நான் விதிமுறைப்படி செய்த அர்ச்சனைக்கு அகமகிழ்ந்து என் வினைப்பயனை அறவே ஒழித்து திருவருள் புரிந்து நல்ல பயனை கொடுக்க வேண்டும். 

சிவபெருமானும் உமாதேவியுமாகிய இருவரும் எனக்கு எப்போதும் நற்பயன்களையே வழங்குவார்களாக! குற்றமற்ற வரத அபயகரங்கள் நற்பயன்களை நாள்தோறும் நல்குமாக. அவ்விருவருடைய சிகைகள் யான் விரும்பியவற்றை தந்தருளுமாக. யாவராலும் துதி செய்யத்தக்க அவருடைய கவசங்கள் குற்றமற்ற பயன்களை தந்துவட்டும். அவர்கள் திருவிழிகள் வேண்டிய பயன்களை கொடுக்குமாக. அவர்களுடைய ஆயுதங்கள் நற்பயன்களை அருளுக! 

வாமாதிதவாதி அஷ்ட ருத்திரர்களூம் தத்தம் சக்தியருடன் சிறந்த பயனை வழங்குவாராக . அனந்தனது அஷ்ட வித்தியேஸ்வரர்கள் சக்திகளோடு நற்பயன்களை அளிப்பாராக. பவன் முதலிய எண்மரும் , மாதேவன் முதலிய பதினொருவரும் தத்தம் சக்திகளுடன் நற்பயனை அருளுக. இடபதேவன் தன் எண்ணற்ற பயனை ஈயட்டும். நந்தி, மகாகாளி, சாத்தன், சப்தகன்னியர், வினாயகர் இவர்கள் உயர்ந்த பயன்களை உதவுக. ஜேஷ்டை நற்பயன் தருக. கணாம்பிகை , சதி, மேனை, பார்வதி, உருத்திராணி முதலியோர் மிக்க பயன் தருக. சண்பன், இடபன், பிங்கலன், பிருங்கிவீரன் இவர்கள் எனக்கு மிக்க வல்லமை தருக. கலைமகள், திருமகள், மோகினி, துர்க்கை, உருத்திரர்கள், பிரதமகணங்கள், பூதங்கள் உமாதேவியின் தோழிகள், உருத்திர கன்னிகைகள், சூரியன் முதலிய இவர்கள் ஆவரணத்துடன் நற்பயனை விரைவில் அளிப்பார்களாக. பிரம்மதேவன், சூலப்படை தாங்கிய உருத்திரன், விஷ்ணு முதலியவர்கள் தம் ஆவரணத்துடன் அழியாப்பயன்களை கொடுத்தருள்க. அவர்களது தேவிமார்கள் கெடாத நற்பயன்களை தருவார்களாக.

ஜனகர் முதலான முனிவர்கள் நால்வரும் தட்சன் முதலான பதினோரு பிரம்மாக்களும் நற்பயன்களை கொடுப்பார்களாக. தர்மம், சங்கற்பம், வேதம், இதிகாசம், புராணம், சாஸ்திரங்கள், வித்தைகள், திசைகள், திக்கு பாலகர்கள், சூலம் முதலிய ஆயுதங்கள், ஆகாயத்திலுள்ள கோமாதாக்கள் , வடுகக்கடவுள் நான் விரும்பிய பயனை கொடுத்திடுக. அஷ்டவயிரவர்கள், யோகியர்கள், நாரதன் முதலிய முனிவர்கள் , சாத்தியர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அக்கினிக்கொழுந்து போன்ற சிகைகளுடைய பேய்களீறாகிய தேவ யோனிகள், அசுரகள், அரக்கர்கள், நாகங்கள், கருடர்கள் இவர்கள் நற்பயனளித்திடுக. 

கடல்கள், தீவுகள், நதிகள், ஓடைகள், மலைகள், காடுகள், பசுக்கள், பறவைகள், மரங்கள், கிருமிகள், புவனங்கள், புவனபதிகள், அண்டங்கள்,  அண்டத்தலைவர்கள் பயனளிப்பாராக. வர்ணங்கள், பதங்கள், மந்திரங்கள், தத்துவங்கள், தத்துவங்களில் விளங்கும் தலைவர்கள், பிரம்மாண்டத்தை காக்கும் உருத்திரர்கள், சிவ வித்தை, சிவஸ்தோத்திரம், சிவ புராணம், சிவதர்மம் என்பன எனக்கு மேம்பட்ட பயன்களை தர வேண்டும். சுவேதன் முதல் இலகுளிசன் ஈறாகவுள்ள குரவர்கள் அவரகளுடைய புதல்வர்கள் சைவர்கள் மஹேஸ்வரர்கள், வேதியர் முதலிய வருணத்தவர்கள் சாங்கியம் முதலிய சாஸ்திரத்தின் வழிபட்டவர்கள் இவர்கள் யாவருமே யான் நற்கருமம் செய்ய அருள்புரிவாராகுக. 

சௌரம் முதலிய மதங்களில் உள்ளவர்களும், உயர்ந்த சைவ சித்தாந்த மார்க்கத்தில் ஒழுகியவர்களும், பாசுபதத்தில் இருப்பவர்களும், காபாலிகத்தில் பொருந்தியவர்களும் அடியேன் நற்கருமம் செய்ய கிருபை செய்வார்களாக. உத்தர தட்சிண நெறிகளில் உள்ளோர் ஞானத்தை அருள்வாராக. மோட்சலோகமும் ஈஸ்வரனும் இல்லையென்பவர்களும் செய்த நன்றி மறந்தவர்களும் பாசாங்குதாரர்களும் என்னைச் சேராமல் அகல்வார்களாக. தகுதியுடையவர்கள் அருள்வாராக , நல்லோர் மங்கல் வசனம் கூறுவார்களாக. உமாதேவியாரோடும், வினாயகக்கடவுளோடும், முருகக்கடவுளோடும் விளங்கும் சிவபெருமானே திருவருள் புரிவாயாக!
   

Monday, 21 December 2015

திருவாசகம்

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! 
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! 
தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், 
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,
சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,
முந்தை வினை முழுதும் ஓய, உரைப்பன் யான்:
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி, 
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;

பதிவிறக்கம் செய்ய 
உரை 

விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;

பதிவிறக்கம் செய்ய 
உரை 

புல் ஆகி, பூடு ஆய், புழு ஆய், மரம் ஆகி, 
பல் விருகம் ஆகி, பறவை ஆய், பாம்பு ஆகி,
கல் ஆய், மனிதர் ஆய், பேய் ஆய், கணங்கள் ஆய்,
வல் அசுரர் ஆகி, முனிவர் ஆய், தேவர் ஆய்,
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்,
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்!
மெய்யே, உன் பொன் அடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்;

பதிவிறக்கம் செய்ய 
உரை 

`உய்ய, என் உள்ளத்துள், ஓங்காரம் ஆய் நின்ற
மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
"ஐயா" என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

வெய்யாய்! தணியாய்! இயமானன் ஆம் விமலா!
பொய் ஆயின எல்லாம் போய் அகல, வந்தருளி,
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச் சுடரே!
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!
கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்
சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறிநின்று,
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்! விண்ணோர்கள் ஏத்த
மறைந்து இருந்தாய், எம்பெருமான்! வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை,
அறம், பாவம், என்னும் அரும் கயிற்றால் கட்டி,
புறம் தோல் போர்த்து, எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா! உனக்குக்
கலந்த அன்பு ஆகி, கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி,
நிலம் தன் மேல் வந்தருளி, நீள் கழல்கள் காஅட்டி,
நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு,
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!
அன்பருக்கு அன்பனே! யாவையும் ஆய், அல்லையும் ஆம் 
சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே!
ஆதியனே! அந்தம், நடு, ஆகி, அல்லானே!
ஈர்த்து என்னை, ஆட்கொண்ட எந்தை பெருமானே!
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின்
நோக்கு அரிய நோக்கே! நுணுக்கு அரிய நுண் உணர்வே!
போக்கும், வரவும், புணர்வும், இலாப் புண்ணியனே!
காக்கும் எம் காவலனே! காண்பு அரிய பேர் ஒளியே!
ஆற்று இன்ப வெள்ளமே! அத்தா! மிக்காய்! நின்ற
தோற்றச் சுடர் ஒளி ஆய், சொல்லாத நுண் உணர்வு ஆய்,
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து, அறிவு ஆம் 
தேற்றனே! தேற்றத் தெளிவே! என் சிந்தனையுள்
ஊற்று ஆன உண் ஆர் அமுதே! உடையானே!

பதிவிறக்கம் செய்ய 
உரை 

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; "எம் ஐயா," "அரனே! ஓ!" என்று என்று
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,
கள்ளப் புலக் குரம்பை கட்டழிக்க வல்லானே!
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே!
தில்லையுள் கூத்தனே! தென்பாண்டி நாட்டானே!
அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,
சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,
பல்லோரும் ஏத்தப் பணிந்து.