Monday, 30 November 2015

சிவமயமே எங்கும் சிவமயமே!

கருவறையில் இருக்கும் மகாலிங்கம் போலவும், உடம்புக்கு உயிர் போலவும் விளங்குவது சிவநாமம். வேதங்களின் மத்தியில் ஜீவரத்தினமாகவும் திகழ்கிறது.பாவத்தை கணப்பொழுதில் காணாமல் போகச் செய்யும் பொருள் ஒன்று இருக்கிறது. அதைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். இரண்டு எழுத்துக்களால் ஆன சிவ என்னும் நாமமே அது. சிவநாமத்தை சொல்ல தகுதி என்ன வேண்டும் என்று கேட்டால், மனிதனாகப் பிறந்த யாரும் அதைச் சொல்லலாம். நாக்கு இருந்தால் மட்டும் போதும்.சிவ என்று சொல்லாதவரைக் கண்டால், சிவநாம மகிமையை உணராத இவனுக்கு நாக்கு கொடுத்து பயனில்லை என்று கடவுள் திரும்பி வாங்கிக் கொண்டு விடுவான்.கோயிலுக்குச் சென்று சிவ பெருமானை நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ண வேண்டாம். ஹர ஹர மகாதேவா என்று இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே யாரும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.ஹர ஹர மகாதேவா என்ற நாம ஒலி, இந்த உலகம் முழுதும் நிறையச் செய்ய வேண்டும். இந்த நிலையை அடைந்து விட்டால், உலகிலுள்ள தீய
சக்திகள் யாவும் ஒழிந்து விடும்.நமக்கு கஷ்டம் ஏதும் வந்து விட்டால், உதவி செய்யக் கூடிய யாரையாவது தேடி அலைகிறோம். சிவாய நம என்று சிந்தித்துஇருந்தால் அபாயம் ஏதுமில்லை என பெரியவர்கள் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.

தயாளமும், கருணையும் நிறைந்தவர் சிவன். அறுபத்து மூன்று நாயன்மார்களில்எத்தனையோ பாமர வாழ்வு நடத்திய எளியவர்களும்சிவனருளால் நற்கதி அடைந்துஇருக்கிறார்கள்.அனைவரும் எளிதில் அணுகக் கூடிய சிவபெருமானை நினைத்து, மனம் உருகி கரைந்து கண்ணீர் பெருக்கினால், பிறவி சக்கரத்தில் இருந்து நம்மால் விடுபட முடியும்.எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையுமாக இருப்பவர் சிவனே. உலகிற்கெல்லாம் தாயும்தந்தையுமாக இருக்கும் பார்வதி பரமேஸ்வரரை வணங்குகிறேன் என்று மகாகவி காளிதாசர்ரகுவம்சத்தின் முதல் மங்கள ஸ்லோகத்தில் பாடியிருக்கிறார். ஒரே சர்க்கரையால் பல இனிப்புகள் செய்வது போல, ஒன்றாக இருக்கும் சிவமேஉலகிலுள்ள அத்தனைபொருளுமாக ஆகியிருக்கிறது. மனம் பாவச் செயலில்ஈடுபடாமல் இருக்கவும்,முன்வினைப் பாவம் அடியோடு நீங்கவும் எப்போதும் சிவனை தியானிக்க வேண்டும். ஈஸ்வர தியானமே வாழ்வின் நம் அன்றாடப் பணியாக இருக்க வேண்டும்.எருக்கு, தும்பை, ஊமத்தை இந்த மூன்று பூக்களும்சிவனுக்குப் பிரியமானவை. உலகில் எத்தனையோ மலர்கள் இருந்தாலும், மணமோ, விலையோ இல்லாத இந்த மலர்களை விரும்புவது, அவரின் எளிமையைக் காட்டுகிறது.அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையேநற்றுணையாவது நமச்சிவாயவே என்றெல்லாம் அருளாளர்கள் சிவனை திருமுறைகளில் துதி செய்திருக்கிறார்கள். நாமும் அம்மையப்பரான சிவனின்திருவடிகளை எப்போதும் சிந்தித்து நல்வாழ்வு பெறுவோம்.

Thursday, 26 November 2015

குலதெய்வம் என்பது

குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து நம்மை முதன்மைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடியது. தேவைகளை உணர்ந்து நமக்கு உடனடியாக தரக் கூடியதுதான் குலதெய்வம்.

பொதுவாக ஒவ்வொருவரும் அவர்களது முன்னோர்களின் வழியைப் பின்பற்றி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வாக வழிபடுவார்கள். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வ...ழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர்.

அதனால், குலதெய்வ வழிபாடு என்பது முக்கியம். குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.குலதெய்வ வழிபாட்டால் குழந்தை பாக்கியம் உட்பட எல்லாம் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களது குலதெய்வத்தை பரம்பரை பரம்பரையாக வணங்கி வருகின்றனர். அந்தக் குடும்பத்தினருக்கு அந்த தெய்வம் மிகப் பரிச்சயமானதாக இருக்கும்.

ஒருவரின் சந்தோஷமான சுபிட்சமான வாழ்க்கைக்கு குல தெய்வ ஆராதனையும் பித்ருக்களின் ஆசியும் மிக மிக மிக முக்கியம். இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.

பிரார்த்தனைகளில் மிகவும் முக்கியமான பிரார்த்தனை குல தெய்வ பிரார்த்தனை ஆகும். குல தெய்வ பிரார்த்தனையை தவிர்த்து வேறு எந்த பிரார்த்தனை செய்தாலும் அதில் பலனில்லை. 

ஆயிரம் கோயிலுக்கு சென்றாலும் குல தெய்வ பிரார்த்தனை செய்யாதவர்களுக்கு ஆயிரம் கோயிலுக்கு சென்ற பலன் நிச்சயம் கிடையாது. 

குல தெய்வ பிரார்த்தனை என்பது உங்களது தந்தை, தாத்தா, முப்பாட்டன் அவர்களுக்கு முன்னாள் உள்ள மூதாதையரால் வணங்கப்பட்ட தெய்வம் ஆகும்.

குல தெய்வம் கோயிலுக்கு சென்று நீங்கள் வணங்கும் போது அந்த குலதெய்வத்தின் அருள் மட்டும் அல்லாமல் உங்களுடைய மூதாதையரின் ஆசியும் கிடைக்கின்றது.

அதுபோன்று குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை வளமாகிறது. உங்களுடைய சந்ததிகளும் சுகமாக வாழ்வார்கள்.

Wednesday, 25 November 2015

உருத்திராட்சம்

உருத்திராட்சம் எப்படி உண்டானது? அதை மனிதர்கள் எவ்வாறு அணிய வேண்டும்? எந்த மந்திரங்களைக் கூறித் தரிக்க வேண்டும்? அதில் எத்தனை பேதமுகங்கள் உள்ளன என்று காலாக்னி உருத்திரரைப் பூதாண்டார் கேட்டார்.
இக்கேள்விக்கு காலாக்னி உருத்திரர். 'ஆயிரம் திவ்ய வருஷங்கள் நான் கண்களை மலர்த்திக் கொண்டிருந்தேன்.எனது மலர்த்திய கண்களிலிருந்து நீர்த்துளிகள் பூமியின் கண்ணே விழுந்தன. அக்கண்ணீர்த் துளிகள் அன்பர்களுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டிய காரணத்தால் ஸ்தாவரமாகி உருத்திராட்சங்களாயின' என்றார்.
உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.
உருத்திராட்சத்தை தரித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள்.
இரே அளவுள்ளதும், உறுதியானதும், சம முத்துகள் பொன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து உடலில் அணிய வேண்டும்.
இனி உருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக உருத்திராட்சம் பரத்துவ சொரூபம். இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.
இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரீஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.
மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.
அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.
ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் அருள் கிடைக்கும் . அதிதேவதை அஷ்டவசு.
இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரி காரம் ஏற்படும்.
பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன்அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.
உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.
உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால்போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற மானிடர்கள் தா¢த்திரம் உடையவராய் இருந்தாலும் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.
தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிப்பு பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும்.
பிறப்பு - இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிபோரும் , புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.
'ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்'
என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.

பஞ்சபூத சிவதலங்கள்

இந்த உலகம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சிவசக்திகளால் ஆனது. இந்த ஐந்து சக்திகளுக்கு உலகை ஆக்கும் வல்லமையும், காக்கும் வல்லமையும், அழிக்கும் வல்லமையும் உண்டு. இந்த சிவசக்திகளை சமஸ்கிருத மொழியில் பிருதிவி(நிலம்), அப்பு(நீர்), தேயு(நெருப்பு), வாயு(வளி), ஆகாசம்(வான்) என அழைக்கின்றார்கள். இவற்றின் வல்லமையை கருத்தில் கொண்டு ஐம்பெரும்சக்திகள் என்று தமிழில் அழைப்பதைப் போல சமஸ்கிருதத்தில் பஞ்சபூதங்கள் என்று வழங்குகிறார்கள். இறைவனான சிவபெருமான் பஞ்ச பூதங்களாக அருள்புரியும் தென் இந்தியாவின் ஐந்து கோவில்கள் பஞ்சபூத சிவதலங்களாகும்.
1) பிருத்விதலம் –
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் அல்லியங்கோதை திருக்கோயில் பிருத்விதலமாகும். சுந்தர மூர்த்தி நாயனார் நட்பு கொண்டவர், அப்பர் சுவாமிகளால் பாடல்பெற்றவர் தியாகராஜர். பிருத்வி என்றால் மண்ணாகும். இங்குள்ள இறைவனை பிருத்விலிங்கம் என்றும், புற்றுமண்ணால் ஆன லிங்கரூபாக இறைவன் இருக்கிறார் என்பதால் புற்றிடங் கொண்ட நாதர் என்று வழங்கப்படுகிறார்.
2) அப்புதலம் –
தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஐம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் அப்புதலமாகும். இத்திருக்கோயில் திருவானைக்காவல் என்றும் அழைக்கப்பெறுகிறது. அப்பு என்றால் நீராகும். உமையம்மை ஈசனை வணங்க நீரைக் கொண்டு லிங்கம் செய்தார், இந்த லிங்கம் அப்புலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் நீர்வடிவான அப்புலிங்கமாக தோன்றி அருள் செய்த தலம் இது.
3) தேயுதலம் –
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மை திருக்கோயில் தேயுதலமாகும். தேயு என்றால் நெருப்பாகும். பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே யார் பெரியவன் என்று போர் நிகழந்த போது, அடிமுடி காணமுடியாத நெருப்பாக உயர்ந்து தானே பெரியவன் என்று சிவபெருமான் உணர்த்தினார். பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் இறைவன் நெருப்பாக தோன்றி அருள் செய்த தலம் இது.
4) வாயுதலம் –
ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பூங்கோதை திருக்கோயில் வாயுதலமாகும். சிலந்தி, பாம்பு, யானை என உயிர்கள் வழிபட்டு சிவபெருமானை அடைந்த தலம். இந்த உயிர்களின் பெயரான ஸ்ரீ (சிலந்தி), காள (பாம்பு), ஹஸ்தி (யானை) என்று அழைப்படுகிறார். இறைவன் வாயுலிங்கமாக காட்சி தரும் தலம் இது.
5) ஆகாசதலம் –
தமிழ்நாட்டில் சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள நடராசர் சிவகாமியம்மை திருக்கோயில் ஆகாசதலமாகும். நடராஜர் கோலத்தில் உலகில் ஐந்தொழில் செய்யும் திருக்கோலத்தில் சிவபெருமான் இருக்கிறார். மாணிக்கவாசரின் பாடலை எழுதி சிற்றம்பலத்தான் என இறைவனே கையெழுத்து இட்டு அருள் செய்த தலம். சித் என்றால் அறிவு, அம்பரம் என்று வெளி,. நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஆகாயமாக அருள் தரும் தலம் இது.

Tuesday, 24 November 2015

தோஷங்களை போக்கும் “பிரதோஷம்”

மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டதும் அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

திருமால், பிரம்மன், தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டார். அன்னை பார்வதி சிவபெருமானின் கழுத்தில் தன் கைகளால் தடவிய போது கொடிய விஷம் அமுதாக மாறியது. சிவபெருமான் “திருநீல கண்டர்’ ஆனார்.

“சனி பிரதோஷம்”

11ம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

“பிரதோஷ காலம்”

பிரதோஷ காலம் தினமும் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேகால் நாழிகையும், மறைந்த பிறகு மூன்றேகால் நாழிகையும் என மொத்தம் ஏழரை நாழிகை (3 மணி நேரம்) ஆகும். பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் தன்னுள் எல்லாவற்றையும் ஒடுக்கிக் கொள்கிறார்.

“பிரதோஷ தரிசனம்”

வளர்பிறை, தேய்பிறையின் 13ம் நாள் திரயோதசி திதியில் மாலை நேரத்தில் பிரதோஷ தரிசனம் செய்ய வேண்டும். நந்தி தேவரின் கொம்புகளின் நடுவே தியானிப்பது சிறப்பாகும்.

“பிரதோஷ வகைகள்”

பிரதோஷமானது 
நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், 
மாதப் பிரதோஷம், மகா பிரதோஷம், 
பிரளய பிரதோஷம் என்று 5 வகைப்படும்.

நித்ய பிரதோஷம்: தினமும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

பட்சப் பிரதோஷம்: சுக்லபட்ச சதுர்த்தி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மாதப் பிரதோஷம்: கிருஷ்ண பட்ச திரயோதசி பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது.

மகா பிரதோஷம்: சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது மகா பிரதோஷம் ஆகும்.

பிரளய பிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் சிவனிடம் அனைத்தும் ஒடுங்குவது பிரளய பிரதோஷம் ஆகும்.

பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கு கீழ்க்கண்ட பொருட்களை கொடுத்தால் விளையும் பலன்கள் வருமாறு:

1. பால் கொடுத்தால் நோய் தீர்ந்து நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் தந்தால் பல வளமும் உண்டாகும்.

3. தேன் கொடுத்தால் இனிமையான சாரீரம் கிட்டும்.

4. பழங்கள் கொடுத்தால் விளைச்சல் பெருகும்.

5. பஞ்சாமிர்தம் தந்தால் செல்வச்செழிப்புஏற்படும்.

6. நெய் கொடுத்தால் முக்திப்பேறு கிட்டும்.

7. இளநீர் தந்தால் நல்ல மக்கட்பேறு கிடைக்கும்.

8. சர்க்கரை கொடுத்தால் எதிர்ப்புகள் மறையும்.

9. எண்ணெய் தந்தால் சுகவாழ்வு கிட்டும்.

10. சந்தனம் கொடுத்தால் சிறப்பான சக்திகள் பெறலாம்.

11.மலர்கள் தந்தால் தெய்வ தரிசனம் கிடைக்கும்.

மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் பிறவி எடுத்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போக்கிக் கொள்ள முடியும். எனவே, பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறுவோம்.

Saturday, 14 November 2015

சிவதலங்கள்

274 சிவதலங்கள்

ஜோதிலிங்க சிவதலங்கள்

சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்)
ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்)
வைத்திய நாதேசுவர்-பரளி (மகாராட்டிரம்)
பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகாராட்டிரம்)
இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகாராட்டிரம்)
விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)
கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்)

பஞ்சபூத சிவதலங்கள்

மண் (பிருத்திவித்தலம்)  திருவாரூர்நீர் (அப்புத்தலம்) திருவானைக்காதீ
(தேயுத்தலம்) திருவண்ணாமலைவளி (வாயுத்தலம்)- திருக்காளத்திவான் (ஆகாயத்தலம்)- சிதம்பரம்

பஞ்சதாண்டவ சிவதலங்கள்
சிதம்பரம்-ஆனந்த தாண்டவம். திருவாரூர்-அசபா தாண்டவம். மதுரை-ஞானசுந்தர தாண்டவம். அவிநாசி-ஊர்த்தவ தாண்டவம். திருமுருகன்பூண்டி-பிரமதாண்டவம்.

ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்
சிதம்பரம்-பொன் மன்றம் (கனக சபை).
திருவாலங்காடு -மணி மன்றம் (இரத்தின சபை).
மதுரை-வெள்ளி மன்றம் (இரஜத சபை).
திருநெல்வேலி-செப்பு மன்றம் (தாமிர சபை).
திருக்குற்றாலம்-ஓவிய மன்றம் (சித்திர சபை).

சத்த விடங்க சிவத்தலங்கள்
திருவாரூர்-வீதிவிடங்கர் அசபா நடனம்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்|திருநள்ளாறு- நகரவிடங்கர் உன்மத்த நடனம்.

திருநாகைக் காரோணம் என்கிற நாகபட்டிணம்- சுந்தரவிடங்கர் வீசி நடனம்.

திருக்காறாயில் என்கிற திருக்காரைவாசல்-ஆதிவிடங்கர் குக்குட நடனம்.

திருக்கோளிலி என்கிற திருக்குவளை-அவனிவிடங்கர் பிருங்க நடனம்.

திருவாய்மூர்- நீல விடங்கர் கமல நடனம்.திருமறைக்காடு என்கிற வேதாரண்யம்- புவனி விடங்கர் கம்சபாத நடனம்

முக்தி தரவல்ல சிவத்தலங்கள்
திருவாரூர்-பிறக்க முக்தி தருவது சிதம்பரம்-தரிசிக்க முக்தி தருவது திருவண்ணாமலை-நினைக்க முக்தி தருவது
காசி-இறக்க முக்தி தருவது

அட்டவீரட்டானக் கோயில்
திருக்கண்டியூர் – பிரம்மன் சிரத்தைச் சிவன்

கொய்ததுதிருக்கோவலூர் – அந்தகாசுரனைச்

சங்கரித்தது திருவதிகை – திரிபுரம்

எரித்தது திருப்பறியலூர் – தக்கன்

சிரம் கொய்தது வழுவூர் – யானையை உரித்தது

திருவிற்குடி – சலந்தாசுரனைச் சங்கரித்தது

திருக்குறுக்கை – காமனை எரித்தது.

திருக்கடவூர் – எமனை உதைத்தது.

தமிழகத்தின் நவ கைலாயங்கள்
பாபநாசம் சேரன் மகாதேவி கோடக நல்லூர் குன்னத்தூர் (திருநெல்வேலி) முறப்பநாடு ஸ்ரீவைகுண்டம் திருவைகுண்டம் தென்திருப்பேரைராசபதி சேர்ந்தபூமங்கலம்

திருச்சிற்றம்பலம்...

சிவம்

சிவ தத்துவம்

சிவ சின்னங்கள்
திருநீறு உருத்திராக்கம் திருவைந்தெழுத்து காவியுடையானைத் தோல்மான் பாம்பு பிறை நிலா சூலாயுதம்

சிவ தாண்டவங்கள்
ஆனந்த தாண்டவம்
சந்தியா தாண்டவம்
உமா தாண்டவம்
ஊர்த்துவ தாண்டவம்
கஜ சம்ஹாத் தாண்டவம்
கெளரி தாண்டவம்
காளிகா தாண்டவம்

சிவ முகங்கள்
சத்யோ ஜாதம் வாமதேவம் அகோரம் தற்புருடம் ஈசானம்
சிவ ரூபங்கள்
சிவ பெயர்கள்
சிவ அடியார்கள்
சிவ தலங்கள்
சிவ தரிசன பலன்கள்

சிவனது உருவத்திருமேனி
சந்திரசேகரர் உமாமகேஸ்வரர் ரிஷபாரூடர் நடராஜர் கல்யாணசுந்தரர் பிட்சாடனர் காமதகனார்காலசம் ஹாரமூர்த்தி திரிபுராந்தகர் சலந்தரர் கஜாசுர சம்ஹாரர் தக்க்ஷயக்ஞவதர் ஹரியர்த்தர் அர்த்தநாரீசுவரர் கிராதகர்கங்காளர் சண்டேச அநுக்கிரஹர் நீலகணடர் சக்ரப்ரதர் விக்னப்ரசாதர் சோமாஸ்கந்தர் ஏகபாதர்சுகாசனர் தட்சிணாமூர்த்தி இலிங்கோத்பவர் ரிஷபாந்திகர் அகோரவீரபத்ரர் அகோராஸ்ரமூர்த்தி சக்ரதானஸ்வரூபர் சிவலிங்கம் முகலிங்க மூர்த்திசர்வஸம் ஹாரர் ஏகபாத திரிமூர்த்தி திரிபாத மூர்த்திஜ்வரஹரேஸ்வரர் ஊர்த்துவதாண்டவர் வராக் ஸம்காரி கூர்மஸம் ஹாரிமச்சஸம் ஹாரிசரபேசர் பைரவர் சார்த்துலஹரிலகுளீசர் சதாசிவர் உமேசர் புஜங்கலளிதர் புஜங்கத்ராசர் கங்காதரர் கங்காவிசர் ஜனர்யக்ஞேஸ்வரர் உக்ரர் ஆபதோத்தாரணார் ஷேத்ரபாலர் கஜாந்திகர் அச்வாரூடர் கௌரீவரப்ரதர் கௌரீலீலா சமன்விதர் கருடாந்திகர் பிரம்ம சிரச்சேதர் ரக்தபிக்க்ஷா ப்ரதானர் சிஷ்யபாலர் ஹரிவிரிஞ்சதாரணர் சந்தியா நிருத்தர்

சிவபிரானை வழிபட்டு உய்வு பெற்ற உயிர்கள்

சக்தி, பெருமாள், பிரம்மா, இந்திரன், தேவர்கள் என சிவபெருமானை வழிபட்டு பேரு பெற்றதைப் போல பூமியில் உள்ள உயிர்களும் உய்வு பெற்றுள்ளன. கீழே உயர்களின் பெயர்களும், வழிபட்ட தலங்களும்.

சிங்கம் – திருநல்லூர்
யானை – திருக்குற்றாலம், மதுரை,                      காளையார் கோவில், திருவானைக்காவல், திருக்காளத்தி
காளை – திருவையாறு
பசு – ஆவூர், செய்யாறு, ஆவடுதுறை, கரூர், பட்டீஸ்வரம்
குதிரை – சீயாத்தமங்கை
ஆடு – திருவாடானை
பன்றி – சிவபுரம்
கழுதை – கரவீரம்
குரங்கு, அணில், காகம் – குரங்கணில் முட்டம்
முயல் – திருப்பாதிரிப் புலியூர்
நாரை – நாரையூர், மதுரை
கரிக்குருவி – மதுரை, வலிவலம்
மயில் – மயிலாடுதுறை, மயிலாப்பூர்
கருடன் (ஜடாயு) – வைத்தீஸ்வரன், சிறுகுடி
நண்டு – திருந்துதேவன்குடி, திருநீடூர்
வண்டு – திருசைலம், திருண்டுறை, வாழ்கொளிபுத்தூர்
தேனீ – நன்னிலம்
ஆமை – திருமணஞ்சேரி
எறும்பு – திருவெறும்பூர்
பாம்பு – காளத்தி, திருப்பாம்புரம், குடந்தை, குடந்தைக் கீழ்க்கோட்டம்
சிலந்தி – ஆனைக்கா
எலி – திருமறைக்காடு
ஈ – திருஈங்கோய் மலை

Friday, 13 November 2015

காரைக்கால் அம்மையார்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது

நம்பன் றிருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டு மும்பர் மிசைத்தலை யானடத் தேற வுமைநகலுஞ் செம்பொன் னுருவனென் னம்மை யெனப்பெற் றவள் செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய சூலதனமே. தங்குபுகழ்க் காரைக்கால் வணிகன் மிக்க தனதத்தன் றரும்புனித வதியார் மாவின் செங்கனிக டிருவருளா லழைப்பக் கண்டு திகழ்கணவ னதிசயித்துத் தேச நீங்க வங்கவுட லிழந்துமுடி நடையா லேறி யம்மையே யெனநாத னப்பா வென்று பொங்குவட கயிலைபணிந் தாலங் காட்டிற் புனிதனட மனவரதம் போற்றி னாரே.

சோழமண்டலத்திலே, காரைக்காலிலே வைசியர்குலத்திலே, தனதத்தன் என்பவன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் புனிதவதியார் என்கின்ற ஒரு புத்திரியார் பிறந்தார். அத்தனதத்தன் அப்புத்திரியாரை நாகப்பட்டணத்தில் இருக்கின்ற நிதிபதி என்பவனுடைய புத்திரனாகிய பரமதத்தனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துத் தனக்கு வேறு பிள்ளையின்மையால் அவரை நாகபட்டணத்திற்குப் போகவிடாமல், தன்னுடைய வீட்டுக்கு அருகிலே ஒருவீடு கட்டுவித்து, அளவிறந்த திரவியங்களையும் கொடுத்து, கணவனோடும் அதிலிருத்தினான். பரமதத்தன் அந்தச் செல்வத்தை விருத்தி செய்து இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தி வந்தான். அவன் மனைவியாராகிய புனிதவதியார் பரமசிவனுடைய திருவடிகளிலே அன்பு மேன்மேலும் பெருக, இல்லறத்திற்கு வேண்டுவனவற்றை வழுவாது செய்வாராயினார். தம்முடைய வீட்டுக்குச் சிவனடியார்கள் வரின், அவர்களைத் திருவமுது செய்வித்து, அவரவர் வேண்டியபடி பொன் இரத்தினம் வஸ்திரம் முதலாயின உதவுவார்.

இப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் பரமதத்தனிடத்திற் காரியமூலமாக வந்தவர்கள் சிலர் அவனுக்கு இரண்டு மாம்பழங்கொடுக்க; அவன் அவைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் கருத்தை முடித்து, அவைகளை மனைவியாரிடத்திற்கு அனுப்பிவிட்டான். மனைவியார் அவைகளை வாங்கி வைத்த பின்பு, சிவனடியார் ஒருவர் பசியினால் வருந்தி, அவர் வீட்டிற்சென்றார். புனிதவதியார் அவ்வடியவருடைய நிலையைக் கண்டு, கலத்தை வைத்துச் சோறு படைத்து, அந்நேரத்திலே கறியமுது பாகம் பண்ணப்படாமையால், "சிவனடியவரே பெறுதற்கு அரிய விருந்தினராய் வந்தபொழுதே, இதைப் பார்க்கிலும் பெறவேண்டிய பேறு நமக்கு ஒன்றும் இல்லை" என்று நினைந்து, தம்முடைய கணவன் அனுப்பிய மாம்பழங்கள் இரண்டினுள் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து படைத்து, அவ்வடியாரைத் திருவமுது செய்வித்தார். அடியவர் சோற்றை மாங்கனியோடு உண்டு, புனிதவதியாருடைய செய்கையை உவந்து போயினார்.

போயபின், பரமதத்தன் நடுப்பகலிலே வீட்டுக்கு வந்து போசனம்பண்ணும் பொழுது, மனைவியார் எஞ்சியிருந்த மாங்கனியைக் கொண்டுவந்து, கலத்திலே வைத்தார். பரமதத்தன் மிக இனிய அந்தக்கனியை உண்டு அதன் இனிய சுவையினாலே திருத்தியடையாமல் மனைவியாரை நோக்கி, "மற்றக் கனியையுங் கொண்டுவந்து வை" என்றான். மனைவியார் கொண்டு வரச் செல்பவர் போலப் போய் நின்று, கொண்டு, சோகித்து, தம்மை விசுவசிக்கின்ற மெய்யன்பர்களுக்கு உற்றவிடத்து உதவும் பரமசிவனுடைய திருவடிகளைத் தியானித்தார். உடனே, அக்கடவுளுடைய கருணையினால், அதிமதுரமாகிய ஒருமாங்கனி அவர் கையில் வந்திருந்தது.

அவர் அதைக் கொண்டுவந்து, கணவனுடைய காலத்திலே படைக்க; அவன் அதை உண்டு, அதன் சுவை தேவாமிர்தத்தைப்பார்க்கிலுஞ் சிறந்தமையால் "இது முன் நான் தந்த மாங்கனியன்று இது மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியது, இதனை நீ எங்கே பெற்றாய்" என்றான். மனைவியார் அதைக்கேட்டு, தமக்குத் திருவருள் உதவிய திறத்தை வெளிப்படுத்துவது தகுதியன்று என்று நினைந்தமையால் நிகழ்ந்ததைச் சொல்லமாட்டாதவரும், கணவனுக்கு உண்மையை மறைத்துக் கூறுதலும் தகுதியன்று என்று நினைந்தமையால் அதனைச் சொல்லாது விட மாட்டாதவருமாய் வருந்தி நின்று பின் நிகழ்ந்தபடி சொல்வதே கடன் என்று துணீந்து, "நீர் தந்த கனிகளில் ஒன்றை ஓரடியாருக்குக் கொடுத்து விட்டமையால், அதற்கு நான் யாது செய்வேன் என்று கவன்று, பரமசிவனைத் தியானித்துக் கொண்டு நின்றேன். அவருடைய திருவருளினால் இந்தக் கனி அவருடைய திருவருளினாலே அழைத்துத் தா" என்றான். புனிதவதியார் அவ்விடத்தைவிட்டுப் போய், பரமசிவனைத் துதித்து, "இன்னும் ஒரு கனி தந்த தருளீராகில், அடியேனுடைய வார்த்தை பொய்யாய்விடும்" என்று விண்ணப்பஞ்செய்ய; சுவாமியுடைய திருவருளினாலே ஒரு மாங்கனி அவர்கையில் வந்திருந்தது. அவர் அதைக் கொண்டு வந்து, கணவன்கையிற் கொடுக்க; அதன் ஆச்சரியமடைந்து வாங்கினான். வாங்கிய பழத்தைப் பின் காணாதவனாகி, மிகுந்த பயங்கொண்டு, மனந்தடுமாறி, அப்புனிதவதியாரைத் தெய்வமென நினைந்து, அவரைப் பிரிந்து வாழவேண்டும் என்று துணிந்து, தன்கருத்தைப் பிறருக்கு வெளிப்படுத்தாமல், அவரோடு தொடர்பின்றி ஒழுகினான்.

ஒழுகு நாளிலே, ஒரு மரக்கலஞ் செய்வித்து, தான் செல்ல விரும்பிய தேசத்திலே விரும்பப்படுகின்ற அரும்பண்டங்களை அதனிடத்து நிறைய ஏற்றி, சுபதினத்திலே சமுத்திரராஜனாகிய வருணனைத் தொழுதுகொண்டு, மாலுமி முதலியோரோடும் ஏறி, அத்தேசத்தை அடைந்து, வாணிகஞ்செய்து, சிலநாளாயின்பின், மீண்டும் அம்மரக்கலத்தில் ஏறி, பாண்டியநாட்டிலுள்ள ஓர் நகரத்தை அடைந்து, அங்குள்ள ஒருவைசியனுடைய மகளை விவாகஞ்செய்து கொண்டு, பெருஞ்செல்வத்தோடும் வாழ்ந்திருந்தான். அவனுக்கு அம்மனைவி வயிற்றிலே ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவன் தான்கூடி வாழ்தற்கு அஞ்சி நீங்கிய மனைவியாரைத் தான் வணங்கும் தெய்வமாகக்கொண்டு, அவருடைய புனிதவதியார் என்னும் பெயரையே அந்தப் பெண்ணிற்கு இட்டான்.

பரமதத்தன் இப்படியே இங்கே இருக்க, புனிதவதியார் காரைக்காலிலே கற்பினோடு இல்லறத்தை வழுவாது நடத்திக் கொண்டு வந்தார். அவருடைய சுற்றத்தார்கள், வாணிகத்தின் பொருட்டுச் சென்ற பரமதத்தன் பாண்டிநாட்டிலே ஓர் நகரத்திலே செல்வத்தை விருத்திசெய்துகொண்டு வாசகஞ்செய்கின்றான் என்று கேள்வியுற்று, அவனிடத்திற் சிலரை அனுப்பி, அவனுடைய நிலையை உணர்ந்து, கவலை கூர்ந்து, புனிதவதியாரைத் தாமே அவனிடத்திற்குக் கொண்டுபோய் விடவேண்டும் என்று நினைந்து, சிவிகையில் ஏற்றிக்கொண்டு சென்று, அவனிருக்கின்ற நகரத்திற்குச் சமீபித்து, தாம் புனிதவதியாரைக் கொண்டுவந்தமையை அவனுக்கு ஆள் அனுப்பித் தெரிவித்தார்கள். அவன் அதனை அறிந்து அச்சங்கொண்டு, தன்னுடைய இரண்டாம் மனைவியோடும் மகளோடும் புனிதவதியாரிடத்திற்கு வந்து, "அடியேன் உம்முடைய கருணையினாலே வாழ்கின்றேன். இந்தப் பெண்ணுக்கு உம்முடைய பெயரையே இட்டேன்" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய பாதங்களிலே விழுந்து சாஷ்டங்கமாக நமஸ்கரித்தான். உடனே புனிதவதியார் தம்முடைய சுற்றத்தார்களிடத்திலே அச்சத்தோடும் ஒதுங்கி நிற்க; அவர்கள் வெள்கி, பரமதத்தனை நோக்கி, "நீ உன்னுடைய மனைவியை வணங்குவதென்னை" என்றார்கள். அதற்குப் பரமதத்தன்" இவரிடத்திலே ஒரு பெரிய அற்புதத்தைக் கண்டபடியால், இவர் தெய்வப் பெண்ணேயன்றி மானுடப் பெண்ணல்லர் என்று துணிந்து, இவரைப் பிரிந்தேன். இவரை நான் தொழுந்தெய்வம் என்று கொண்டமையால், நான் பெற்ற இந்தக் குழந்தைக்கு இவர் பெயரைத் தரித்தேன். அதுபற்றியே இவருடைய திருவடியையும் வணங்கினேன். நீங்களும் இவரை வணங்குங்கள்' என்றான், அதுகேட்ட சுற்றத்தார்கள் 'இது என்ன ஆச்சரியம்" என்று திகைத்து நின்றார்கள். புனிதவதியார் கணவன் சொல்லிய வார்த்தையைக் கேட்டு, பரமசிவனுடைய திருவடிகளைச் சிந்தித்து, "சுவாமி! இவனுடைய கொள்கை இது, இனி இவன்பொருட்டுத் தாங்கிய அழகு தங்கிய தசைப் பொதியை நீக்கி, தேவரீரைச் சூழ்ந்து நின்று துதிக்கின்ற பேய் வடிவை அடியேனுக்குத் தந்தருளல்வேண்டும்" என்று பிரார்த்தித்தார். அந்தக்கணத்தே, அக்கடவுளுடைய திருவருளினாலே, மாமிசம் முழுதையும் உதறி, ஏற்புடம்பாக, மண்ணுலகமும், விண்ணுலகமும் வணங்கும் பேய்வடிவமாயினார். அப்பொழுது தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தேவதுந்துபிகள் ஒலித்தன. அதுகண்ட சுற்றத்தார்களெல்லாம் அஞ்சி, அவரை நமஸ்கரித்துக் கொண்டு போய் விட்டார்கள்.

புனிதவதியார் தமக்குச் சிவபெருமானுடைய திருவருளினாலே கிடைத்த ஞானத்தைக்கொண்டு, அற்புதத்திருவந்தாதியும் திருவிரட்டைமணிமாலையும் பாடி, திருக்கைலாச கிரிக்குப் போகவிரும்பி, மனசிலும் பார்க்க மிகுந்த வேகத்தோடு சென்று, அந்தத்திருக்கைலாசகிரியின் பக்கத்தை அடைந்து, அங்கே காலினால் நடத்தல் தகுதியன்றென்று ஒழிந்து, தலையினாலே நடந்துபோய், மலையிலேறினார், ஏறும்பொழுது, உமாதேவியார் அதைக் கண்டு, எம்போலிகள் புனிதவதியாருடைய திடப்பத்தியைக் குறித்து உலகமாதாவாகிய உமாதேவியாரே ஆச்சரியம் அடைந்தாராயின், நாம் எவ்வளவு ஆச்சரியம் அடைதல் வேண்டுமென்று சிந்திக்கச் செய்யும் பொருட்டுத் தாம் ஆச்சரியமுடையவராகி, அவரது பத்தி மகிமையை உயர்வொப்பில்லாத பரமசிவனுடைய திருவாக்கினாலே நமக்கு உணர்த்துவித்து நம்மை உய்விக்கத் திருவுளங்கொண்டு, அக்கடவுளை வணங்கி நின்று, "சுவாமீ! இங்கே தலையினால் நடந்து ஏறிவருகின்ற எற்புடம்பை யுடையவரது அன்பின் மகிமை இருந்தபடி என்னை" என்று விண்ணப்பஞ்செய்ய, பரமசிவன் "இங்கே வருகின்றவள் நம்மைத் துதிக்கின்ற அம்மை என்றறி இந்தப் பெருமை பொருந்திய வடிவத்தையும் வேண்டிப் பெற்றாள்' என்றார். பின் புனிதவதியார் சமீபத்தில் வந்தவுடனே உலகமெல்லாம் உய்யும் பொருட்டு, அவரை நோக்கி, "அம்மையே" என்று அழைத்தார். அது கேட்ட புனிதவதியார் "அப்பா" என்று சொல்லிக்கொண்டு அவருடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்தார். சுவாமி அவரை நோக்கி, "உனக்கு வேண்டும் வரம் யாது" என்று வினாவ; புனிதவதியார் வணங்கி நின்று, "சுவாமி! அடியேனுக்கு இறவாத பேரின்பமயமாகிய அன்பு வேண்டும்; இனி பிறவாமை வேண்டும்; பிறக்கினும் தேவரீரை ஒரு காலமும் மறவாமை வேண்டும்; இன்னும் தேவரீர் திருநிருத்தஞ் செய்யும்பொழுது, தேவரீருடைய திருவடியின் கீழே சிவானந்தத்தை உடையேனாகி, தேவரீரைப் பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்." என்று விண்ணப்பஞ்செய்தார். சுவாமி அவரை நோக்கித் "தென்றிசையிலுள்ள ஆலங்காட்டிலே நம்முடைய நடனத்தைத் தரிசித்து, பேரானந்தத்தோடு நம்மைப் பாடிக்கொண்டிரு" என்று அருளிச்செய்தார். அதுகேட்ட காரைக்காலம்மையார் சுவாமியை நமஸ்கரித்து அநுமதி பெற்றுக்கொண்டு, திருவாலங்காட்டுக்குத் தலையினால் நடந்து சென்று, சுவாமியுடைய திருநடனத்தைத் தரிசித்து, "கொங்கை திரங்கி" என்னும் மூத்த திருப்பதிகத்தையும், "எட்டியிலவமீகை" என்னுந் திருப்பதிகத்தையும் பாடினார். அவர் சுவாமியுடைய தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அநுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்றார்