Wednesday, 23 November 2016

கண்ணப்பநாயனார்

ஈசனுக்கு கண்கொடுத்த கண்ணப்பநாயனார்....
சுதர்சன சக்கரத்திற்காக ஆயிரம் தாமரை மலர்களை கொண்டு சிவபெருமானை பூஜித்தார் மகாவிஷ்ணு. ஆயிரத்திற்கு ஒரு மலர் குறைந்தபோது, தனது கண்ணை பறித்து அதை ஒரு மலராக வைத்து ஈசனை வழிபட்டு சுதர்சன சக்கரத்தைப் பெற்றார். ஆனால் அன்பின் காரணமாக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இறைவனுக்காக தனது இரண்டு கண்களையும் இழக்க துணிந்ததால் கண்ணப்ப நாயனார், பக்தியில் உயர்ந்தவராகிப் போனார்.

வேடர் குலத்தில் பிறந்தவர்

வேடர் குலத் தலைவர் நாகன் என்பவருக்கும், அவரது மனைவி தத்தை என்பவருக்கும் பல ஆண்டு தவத்தின் பலனாக பிறந்தவர் கண்ணப்பர். அவருக்கு தாயும் தந்தையும் திண்ணன் என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர். சிறுவயதில் சுறுசுறுப்பாக துடுக்குத்தனமாக இருந்தாலும், தன் குலத் தொழிலான வேட்டையாடுதலையும் நன்றாக கற்றுக்கொண்டார் திண்ணன். நாகன் முதுமையை எட்டி விட்டதால் அவரால் முன்போல் வேட்டையாட முடியவில்லை. தலைமை இல்லாததால் பலரும் வன விலங்குகளை வேட்டையாடாமல் விட்டு விட்டனர்.

இதனால் விலங்குகள் பெருகி பயிர்களை எல்லாம் அழித்து வந்தன. இதனால் கலக்கமுற்ற வேடர்கள் அனைவரும் நாகனை சந்தித்து தீங்கில் இருந்து காத்தருள கேட்டுக் கொண்டனர். நாகன், ‘எனக்கு மூப்பு வந்து விட்டது. எனவே எனது மகனை தலைவராக்குகிறேன். அவன் உங்களின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவான்’ என்று கூறினார். அதன்படியே தன் மகனை வேடர்குல தலைவனாகவும் ஆக்கினார்.

வேட்டையாடுதல்

திண்ணனின் தலைமையில் வேடர்கள் அனைவரும் காட்டில் மிகுந்திருந்த விலங்குகளை வேட்டையாடினர். அதே வேளையில் யானைக் கன்றுகளையும், கருவுற்ற விலங்குகளையும், ஏனைய விலங்குக் குட்டிகளையும் கொல்லக் கூடாது என்ற தருமநெறி தவறாமல் வேட்டையாடினார் திண்ணன். இவ்வாறு ஒரு முறை வேட்டையாடியபோது, பன்றி ஒன்று, யானையைக் காட்டிலும் வேகம் கொண்டு வலையை அறுத்துக் கொண்டு திமிறி ஓடியது.

இதனைக் கண்ட திண்ணன் மற்றும் அவருடன் வந்த காடன், நாணன் ஆகிய வேடர்கள் மூவரும் சேர்ந்து அந்த பன்றியை துரத்திச் சென்றனர். பாய்ந்து சென்ற பன்றியை அதே பாய்ச்சலுடன் துரத்திச் சென்று வீழ்த்தினார் திண்ணன். அவரது வீரச் செயலை நாணனும், காடனும் பாராட்டினர். வெகு தூரம் பன்றியை துரத்தி வந்ததால் மூவருக்கும் பசி ஏற்பட்டது. எனவே  இறைச்சியை தீயில் வாட்டி உட்கொள்ள முடிவு செய்தனர். அதற்காக தண்ணீர் தேடினர்.
அன்பு பெருக்கெடுத்து...

அப்போது மலை ஒன்றின் அடிவாரத்தில் நீர் தடாகம் இருப்பதை கண்டனர். அங்கு காடனை தீயில் இறைச்சியை சமைக்கும்படி கூறினார் திண்ணன். பின்னர் நாணன் கூற காளத்தி என்ற அந்த மலையின் மீது குடுமித்தேவர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருப்பதை அறிந்து கொண்டார் திண்ணன். நாணனும், திண்ணனும் மலைக்குச் சென்றனர். அங்கு வீற்றிருந்த இறைவனைக் கண்டதும் அன்பு பெருக்கெடுத்து இறைவனையே சிந்தித்தபடி நின்றார் திண்ணன்.

சிவலிங்கத்தின் மீது பூவும், இலையும், அதன் அருகில் அமுதும் படைக்கப்பட்டிருந்தது. அதுபற்றி நாணனிடம் கேட்டார் திண்ணன். ‘நானும் உன் தந்தையும் ஒரு முறை இங்கு வந்தபோது, சிவாச்சாரியார் ஒருவர் இங்கு வந்து ஈசனை குளிர்ந்த நீரால் நீராட்டி, இலையும் பூவும் சூட்டி, உணவு படைத்து, சில மொழிகளை சொல்லிச் சென்றார். அவர்தான் இதுபோன்று செய்திருப்பார்’ என்று கூறினான்.

இறைவனுக்கு இவைதான் செய்ய வேண்டும்போல் என்று திண்ணன் நினைத்துக் கொண்டார். அதையே இறைவனுக்கு தானும் செய்ய எண்ணினார். ஆனால் இறைவனை பிரிந்து செல்ல அவர் மனம் மறுத்தது. ஒருகணமும் பிரியாமல் அங்கேயே இருக்க வேண்டும் என்று அவரது சிந்தனையில் தோன்றியது. இருந்தாலும், இறைவனுக்கு பசிக்குமே, அவருக்கு உணவு படைக்க வேண்டுமே என்று எண்ணி அங்கிருந்து அகல முற்பட்டார்.

இறைச்சி அமுது படைத்து...

மனதை கல்லாக்கிக் கொண்டு அங்கிருந்து அகன்றார். விரைந்து சென்று காடன் தீயில் வாட்டி சமைத்து வைத்திருந்த பன்றியின் இறைச்சியில் தரமான இறைச்சியை தேர்ந்தெடுத்தார். அவை சுவையாக இருக்கிறதா என்று தன் பல்லால் கடித்து பார்த்தார். தேர்ந்தெடுத்த இறைச்சியை ஒரு இலையில் எடுத்துக் கொண்டார். அருகில் இருந்த தடாகத்தில் இருக்கும் தூய நீரை வாயில் நிரப்பிக் கொண்டும், மரத்தில் இருந்து மலர்களை பறித்து தன் தலையில் சொருகிக் கொண்டும், மலை மீது இருக்கும் ஈசனை நோக்கி பாய்ந்து சென்றார்.

அங்கு இறைவன் மீது இருந்த மலர்களை, கையில் இறைச்சி இருந்ததால் காலைத் தூக்கி செருப்பால் அகற்றினார். வாயில் கொணர்ந்து வந்திருந்த நீரால், இறைவனுக்கு திருமஞ்சன நீராட்டினார். தொடர்ந்து இறைவனுக்கு இறைச்சியை அமுது படைத்து, ‘இறைவா! இது தேனினும் இனிமையான சுவை கொண்ட இறைச்சி. நானே அதன் சுவையை பார்த்து தேர்ந்தெடுத்து கொண்டு வந்தேன். இதனை உண்டு அருள வேண்டும்’ என்று வேண்டினார்..
இதனைக் கண்ட நாணன், ‘திண்ணா! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?. நாம் இங்கிருந்து செல்ல வேண்டும் வா!’ என்று அழைத்தும் அவரிடம் எந்த சலனமும் இல்லை. அவரது கண்கள் இறைவனின் கண்களோடு கலந்திருந்தது. பலமுறை அழைத்தும் பலன் இல்லாததால், இருப்பிடம் சென்று திண்ணனின் தாய், தந்தையரிடம் கூறி இங்கு அழைத்து வருவது என்று நாணனும், காடனும் புறப்பட்டுச் சென்றனர்.

சிவாச்சாரியார் அதிர்ச்சி

அங்கேயே இருந்த திண்ணன், இரவில் இறைவனுக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக வில்லேந்தி காவலுக்கு நின்றார். அதிகாலையில் பறவைகளின் சத்தம் கேட்டு வைகறை புலர்ந்ததை உணர்ந்தார். இறைவனுக்கு அமுது படைக்க வேண்டும் என்று எண்ணியவர், மலையின் மீதிருந்து கீழே இறங்கி இறைச்சிக்காக மான், பன்றி போன்றவற்றை வேட்டையாட புறப்பட்டார்.

அந்த நேரத்தில் வழக்கம்போல் காலையில் இறைவனுக்கு பூஜை செய்ய வரும் சிவாச்சாரியார், இறைவனின் அருகில் இறைச்சியும் எலும்பும் கிடப்பதைக் கண்டு கலங்கினார். ‘இறைவா! இது என்ன சோதனை’ என்று உருகி அவற்றை அகற்றி, சுத்தமான நீரால் இறைவனை நீராட்டி மலர் சூட்டி அமுது படைத்து வழிபட்டுச் சென்றார்.

சிவாச்சாரியார் சென்றதும் இறைச்சியை சமைத்துக் கொண்டு வந்த திண்ணன் அதனை முன்போலவே இறைவனுக்கு படைத்து அமுது செய்ய வேண்டினார். இது நாள்தோறும் நடைபெறும் வழக்கமாயிற்று. சிவாச்சாரியார் காலையில் வந்து இறைச்சியை அகற்றி அமுது படைப்பதும், திண்ணன் இறைச்சியை அமுது படைப்பதுமாக நாட்கள் சென்றன.

இதற்கிடையில் நாகன் தன் மகனை தேடி காளத்தி மலைக்கு வந்தார். ஆனால் அவருடன் செல்ல திண்ணன் மறுத்து விட்டார். நாகனும் தன் நிலையை நொந்தபடி அங்கிருந்து அகன்றார்.

கனவில் தோன்றிய ஈசன்

ஒரு நாள் இரவு சிவாச்சாரியார் உறங்கும் முன்பு இறைவனை நினைத்து, ‘ஐயனே! உனக்கு இறைச்சியை படைத்து அபவாதம் செய்பவர் யார் என்று தெரியவில்லை. நாள்தோறும் நடைபெறும் இந்த கொடுஞ்செயலை நீதான் தடுக்க வேண்டும்’ என்று வேண்டினார். அப்போது அவர் கனவில் தோன்றிய ஈசன், ‘அன்பனே! என்பால் கொண்ட அன்பால் எனக்கு படைக்கப்படும் அமுது அது. அதனை நான் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன். அந்த பக்தனின் பக்தியை நாளை நீ மறைந்திருந்து பார்’ என்று கூறி மறைந்தார்.
மறுநாள் காலை சிவாச்சாரியார் ஈசனுக்கு தான் செய்யும் கடமைகளை செய்து விட்டு அருகில் இருந்த மரத்தின் பின் மறைந்து கொண்டார். சிறிது நேரத்தில் திண்ணன் சுவைமிகு இறைச்சியுடன், தலையில் மலருடனும், வாயில் நீருடனும் அங்கு வந்தார். பக்தனின் பக்தியை சிவாச்சாரியாருக்கு உணர்த்த எண்ணிய சிவன், தன் திருமேனியின் கண் பகுதியில் இருந்து ரத்தம் வழியச் செய்தார். இதனைப் பார்த்து பதறிப் போன திண்ணன், ‘இறைவா! என்ன இது? இந்த கொடுஞ்செயலை செய்தவன் யார்? அவன் எங்கிருக்கிறான்? இப்போதே அவனை கொன்று தீர்க்கிறேன்’ என்று கர்ஜித்தவர் அங்கும் இங்கும் ஓடித் தேடினார். ஆனால் எவரையும் காணவில்லை. சிவலிங்கத்தில் வழிந்த ரத்தத்தை தன் கையால் துடைத்தார். அது நிற்கவில்லை. இறைவனைக் கட்டிக் கொண்டு அழுது அரற்றினார்.

தன் கண்ணை கொடுத்து...

இறுதியில் இறைவனின் கண்ணில் இருந்து வழியும் குருதி நிற்க மருந்து தேடிச் சென்று கொண்டு வந்து பூசினார். ஆனாலும் ரத்தம் வழிவது நிற்கவில்லை. அப்போது திண்ணனுக்கு, ‘ஊனுக்கு ஊன் உற்ற நோய் தீர்க்கும்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. அதன்படி ‘என்னுடைய கண்ணைக் கொடுத்து என் இறைவனின் கண் நோயை நீக்குவேன்’ என்று சூளுரைத்தவர், ஒரு அம்பை எடுத்து தன்னுடைய ஒரு கண்ணை பறித்து ரத்தம் வழிந்த இடத்தில் பொருத்தினார். உதிரம் வழிவது நின்று விட்டது.

கண் பறிபோன வலியே தெரியாதவராக ஆனந்த கூத்தாடினார். அங்கும் இங்கும் ஓடி அகமகிழ்ந்தார். ஆனால் அது நிலைக்கவில்லை. இறைவனின் மற்றொரு கண்ணில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனைக் கண்டு வேதனையடைந்தாலும் மறுகணமே, ‘இதற்கான மருந்து எனக்கு தெரிந்து விட்டது. என்னிடம் இன்னும் ஒரு கண் உள்ளது. அதையும் கொடுத்து இறைவனின் கண் நோய் நீக்குவேன்’ என்றபடி அந்த கண்ணையும் அம்பைக் கொண்டு வெளியே எடுக்க முயன்றார்.

அப்போது, ‘நிறுத்து கண்ணப்ப!... நிறுத்து கண்ணப்ப!’ என்று திண்ணனை தன் கரத்தால் தடுத்து நிறுத்தினார் ஈசன். இவை அனைத்தையும் மறைந்திருந்து கண்டார் சிவாச்சாரியார். வானவர்கள் பூமழை பொழிந்தனர்.

காளத்தியப்பர், ‘கண்ணப்பா! என் அருகில் இருந்து என்றும் மாறாது நிற்பாய்’ என்று அருள்புரிந்தார். இதைவிட சிறந்த பேறு எது? காளத்தியப்பரின் அருகில் கண்ணப்பர் நிலைபெற்று நின்றார்.

அன்பை விட சிறந்த பக்தி எதுவும் இல்லை. பிறரிடம் செலுத்தும் அன்பு உன்னதமானது. அதே அன்பை இறைவனிடம் செலுத்தும் போது அது உயர்வு பெறுகிறது. நம்மையும் உயர்த்துகிறது...

Tuesday, 22 November 2016

சிவ வழிபாடு

ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. சிவ வழிபாட்டினைத் தான் சைவம் என்று போற்றுகின்றோம்.

உலகத்தின் மிகப் பழமையான வழிபாடும் சிவ வழிபாடுதான். பண்டைய கால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ காலகட்டங்களில் சிவ வழிபாடு நடந்திருப்பது அகழ்வாராய்ச்சிகளில் மூலம் அறியமுடிகின்றது.

வேதங்கள் போற்றும் வேதநாயகனாக விளங்குபவர் சிவன். சுப மங்கலத்தை அருளுபவர்.

பரம்பொருளாகிய பரமேஸ்வரரின் மூச்சுக்காற்றிலிருந்தும், உடுக்கை ஒலியிலிருந்தும் சப்தங்கள் தோன்றி, வேத மந்திரங்களாகச் சிதறியிருந்ததை வியாச பகவான் ஒருங்கிணைத்து சதுர் (4) வேதங்களாகத் தொகுத்தார் (ருக், யஜுர், சாமம் & அதர்வணம்).

சிவபெருமானுக்கு பிறப்பில்லாத காரணத்தினால், சிற்ப சாஸ்திரங்களின்படி, சிவபெருமான் அம்சமுள்ள எந்தவொரு வடிவத்திற்கும் (நடராஜர், ஸோமாஸ்கந்தர்) கொப்பூழ் எனும் தொப்புள் அமைப்பதில்லை.

சிவன் எங்கும் நிறைந்திருப்பவர். திசைகள் அனைத்திலும் விளங்கும் திகம்பரர். ஸர்வ லோகங்களிலும் திகழும் சதாசிவர்.

மஹாவிஷ்ணு உலக மக்களைக் காக்க வேண்டி எடுப்பதுஅவதாரம். இந்த அவதாரத்தில் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. (பகவான் கிருஷ்ணர் ஒரு வேடுவனின் அம்பினால் இறந்தார்).

சிவபெருமான் பக்தர்களைக் காக்க எடுப்பது அவஸரம். தக்க சமயம் வரும்போது தோன்றி, ரட்சித்துவிட்டு, மறைந்துவிடுதல்.

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் வழங்குவதில் வல்லமை மிக்கவர் சிவபெருமான்.

சிவ வழிபாட்டில் பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. (காஷ்மீர சைவம், காபாலிக சைவம், சிவாகமம், சைவ சித்தாந்தம்)

சைவ வழிபாட்டு முறைகளில் மிகவும் பிரபலமாகவும், பலனளிக்கக் கூடியதாகவும், பக்தர்களின் வழிபாட்டில் மிக எளிமையாக விளங்குவதும் அமைவது பிரதோஷம்.

ஒரு மாதத்தில் இருமுறை வருவது பிரதோஷ பூஜை. ஒன்று வளர்பிறை திரயோதசி (அமாவாசையிலிருந்து 13ம் நாள்) மற்றொன்று தேய்பிறை திரயோதசி (பெளர்ணமியிலிருந்து 13ம் நாள்) தினம்.

ஒரு சமயம் வீதஹவ்யர் எனும் சிவபக்தர், சித்ரவதி எனும் தமது பத்தினியுடன், தமக்கு சிவாம்சமாக விளங்கக் கூடிய வகையில் மகவு வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, வேறு எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல், சிறு சிறு கற்களையே உணவாக உண்டு கடும் தவம் செய்தார்.

கற்களை மட்டுமே உண்டதனால் அவர் சிலாதர் எனப் போற்றப்பட்டார். சிலாதர் பூஜை செய்த திருத்தலம், வட நாட்டுப் பாடல் பெற்றத் தலமாக விளங்குவதும், பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றும் ஆகிய ஸ்ரீ சைலம் எனும் திருத்தலம். (இதுவே நந்தி தேவர் பிறந்த தலமும் ஆகும். நந்தி தேவர் தவம் செய்த தலம் நந்தியால்)

கற்களை மட்டுமே உண்டு தவமியற்றிய சிலாதருக்கு மனமிரங்கிய சிவன், அவர் முன் தோன்றி, தனது அம்சமாக ஒரு குழந்தை உனக்குக் கிடைப்பான் என திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

சிலாதர் யாகம் செய்வதற்காக, நிலத்தை உழுத போது, மாணிக்க வைடூர்யங்கள் இழைத்த ஒரு பொற்பெட்டியில் ஒரு குழந்தை கிடைக்க, அக்குழந்தைக்கு வீரகன் எனப் பெயரிட்டு, பெருமகிழ்வுடன், கல்வி கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகள் கழித்து, மித்ரன், வருணன் எனும் இரு தேவர்களும் வீதஹவ்யர் எனும் சிலாதர் முனிவரை பார்க்க வந்து, வீரகனுக்கு ஆயுள் சில காலம் தான் என்று கூறினர். இதைக் கேட்ட வீதஹவ்யர் மனமொடிந்து போக, வீரகன் தனது தந்தையைப் பார்த்து, நான் சிவபெருமான நோக்கி தவமிருந்து வரம் பெற்று வருகின்றேன் என கிளம்பினார்.

வீரகன், ஏழு கோடி முறை ஸ்ரீ ருத்ரம் மந்திரத்தை நாத்தழும்பேற ஜபிக்க, சிவபெருமான் வீரகனின் பக்திக்கு மனமிரங்கி, தனது கணங்களுக்கெல்லாம் தலைமை தாங்க, நந்தி எனப் பெயரிட்டு, தனக்கு வாகனமாகவும் ஏற்று, சாகாவரமும், என்றும் தன்னுடன் இருக்கவும், தனது வாயில் காப்பாளனாகவும் ஏற்று அருளினார்.

நந்தியையே தனது பிரதம சீடராக ஏற்று கலைகள் அனைத்தையும் கற்றுணர்த்தினார்.

(நந்தி = தலைமை. ஐந்து கரத்தனை ஆனை.... நந்தி மகன் தனை - என்று திருமூலர் விநாயகரைக் குறிப்பிடும்போது - நந்தி மகன் - என்பது, உலகமனைத்திற்கும் தலைமை தாங்கும் சிவபெருமானையே நந்தி எனக் குறிப்பிட்டு - அவர்தம் மகன் விநாயகர் என்கிறார்.)

சிவனிடமே பாடங்கள் கற்றமையால் சைலாதி எனப் புகழப்படும் நந்தி தேவர் ஞான ஆச்சார்யராக விளங்குபவர். விஷ்ணுவுக்கு சிவஞானம் பெற வழிகாட்டியவர். சிவ வழிபாட்டில் மிக முக்கியத்துவம் பெறுபவர். இன்றைக்கு இருக்கும் தருமபுரம், திருவாவடுதுறை போன்ற ஆதீனங்களுக்கு தலைமை குருவாக விளங்குபவர் நந்தி தேவர்தான்.

ஒரு சமயம், சாகாவரத்திற்கான அமிர்தம் பெறவேண்டி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை, மேரு என்னும் மலையையே மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் பாம்பை கயிறாகக் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமும் கடைய, வேகமும் அழுத்தமும் தாங்காத வாசுகி எனும் பாம்பு தனது விஷத்தன்மை கொண்ட பெருமூச்சினை விட, பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது.

அது, அகிலம் அனைத்தையும் அழிக்கவல்லதாக அச்சுறுத்தலாக இருந்தது. இதைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓட, எங்கெல்லாம் அவர்கள் செல்கின்றார்களோ அங்கெல்லாம் ஆலகால விஷமும் துரத்தியது.

இறுதியில், தேவர்கள் ஸர்வலோக வியாபியான சிவபெருமான் உறையும் கைலாயம் சென்றனர். சிவனை தரிசிக்க வேண்டி கைலாயத்தின் இடப்புறம் வழியாக சென்றால், வலப்புறமாக விஷம் வந்து வாட்டியது. வலப்புறம் வழியாக சென்றால் இடப்புறமாக வந்து இடைமறித்தது.. (ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் - இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. கீழே விபரம் உள்ளது.)

கைலாய நாதனை தேவர்கள் சரணடைய, சிவன் காட்சி தந்து அஞ்சேல் என்று அருளி, தனது மெய்க்காப்பாளனாகிய நந்தியை அழைத்து, அந்த விஷத்தை எடுத்து வரச் சொல்ல, அதன்படியே நந்தி எடுத்து வர, அந்த ஆலகால விஷத்தை, தனது வாயிலிட்டு விழுங்கும் போது, அந்த ஆலகால விஷத்தினால், தனது கணவருக்கு எந்த விதத்திலும் தீங்கு நேரக்கூடாது என்றெண்ணிய பார்வதி தேவி, அந்த விஷம் சிவனின் தொண்டைப் பகுதிக்கு வரும்போது, சிவனின் கண்டமாகிய கழுத்தைப் பிடிக்க, செம்பொன்னார் மேனியனாக விளங்கும் சிவனின் தொண்டையில் விஷம் கருநிறமாகத் தங்கியது.

அகிலம் ஆலகால விஷத்திலிருந்து தப்பியது. தேவர்கள் பயம் நீங்கினர். சிவபெருமானை நீலகண்டன் என போற்றினர்.

மறுபடியும் பாற்கடல் கடைய, அமிர்தம், லக்ஷ்மி தேவி, காமதேனு, உச்சைஸ்ரவம் எனும் குதிரை முதலான தோன்ற அனைவரும் மகிழ்வுற்றனர்.

(இந்தப் புராணத்திற்குள் அற்புதமான அறிவியல் தத்துவம் பொதிந்திருக்கின்றது. அதை விளக்க தனியொரு கட்டுரை எழுத வேண்டியிருக்கும். பிரபஞ்சம் தோன்றிய விதத்தை அறிவியல் விளக்கும் அம்சம் இந்தப் புராணத்தில் அடங்கியுள்ளது)

அச்சமயம், நந்தி தேவர் நாம் எடுத்து வந்த விஷம் அவ்வளவு வீரியம் வாய்ந்ததா என்று எண்ணி, உலகம் உய்ய ஒரு காரியத்தை, நான் செய்தேனே என்று செருக்குற்றார்.

அப்பொழுதுதான், அந்த விஷத்தின் வீரியம் நந்தி தேவரை வீழ்த்தியது.

மயக்கமுற்ற நந்தி தேவருக்கு, அகிலம் அனனத்திற்கும் படியளக்கும் அன்னபூரணியாக விளங்கும் பார்வதி தேவி, அரிசியும், வெல்லமும் கலந்த கலவையை நந்திக்கு மருந்தாகக் கொடுக்க, நந்தியின் தலைக்கு விஷத்தின் வீரியம் வராமலிருக்க சிவபெருமான் தனது பாதத்தை, நந்தியின் தலையில் இருத்தி, தாண்டத்தை நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நிகழ்த்த பிரதோஷ தாண்டவம் நிகழ்ந்தேறியது.

மயக்கமும் விஷமும் நீங்கிய நந்தி, தனது செருக்கு நீங்கி, சிவபெருமானை வணங்கி வழிபட்டார்.

விண்ணோர்கள் அனனவரும் அந்த அற்புதத் தாண்டவத்தைக் கண்டு களித்தனர்.

பாற்கடல் கடையத் தொடங்கியது தசமி தினம் என்றும், ஏகாதசி தினம் முழுவதும் உறக்கமின்றி கடைந்தது என்றும், திரயோதசி தினத்தின், மாலை வேளையில் (4.30 pm - 6.00 pm) தான் நந்தியின் சிரசில் நடனமாடியதாகவும் சிவபுராணங்கள் பகர்கின்றன. இந்த நேரத்தை ரஜனி முக காலம் என்று போற்றுவார்கள்.

திரயோதசி திதியின் மாலை வேளையைத் தான் பிரதோஷ வேளையாகக் வழிபட்டு மகிழ்கின்றோம்.

அரிசி வெல்லக் கலவை ஒரு அற்புதமான மருந்து. வெல்லத்தில் இருக்கும் க்ளுக்கோஸும்  (glucose), அரிசியில் உள்ள அமைலோஸ் (amylase) எனும் ஸ்டார்ச் வகையைச் சேர்ந்த உப்பும் சேர்வது - உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்க வல்லது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு முதலுதவியாக ஜீனியும், உப்பும் கலந்த தண்ணீரைக் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

அது போல, மாட்டிற்கு ஏதேனும் நோய் தாக்கியதாகத் தெரியவந்தால், முதலில் அரிசியும் வெல்லமும் கலந்த கலவையை உணவாகக் கொடுப்பார்கள்.

பிரதோஷ வேளையில் படைக்கப்படும் காப்பரிசி எனும் பிரஸாதம் - அரிசி மற்றும் வெல்லத்தினால் செய்யப்படுவது. அந்த பிரஸாதத்தை உட்கொண்டால், அது நம் உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கவல்லது.

சூரியன் அஸ்தமித்து, சந்திரன் உதிக்கும் நேரமாக அந்தி மாலை நேரம் விஷத்தன்மை கொண்டது என்றும், அவ்வேளையில் தீபம் ஏற்றி, வழிபாடுகள் செய்ய, புனிதமான நேரம் என்றும் சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

சாயங்கால வேளையில் சாப்பாடு கூடாது என்று பெரியோர்கள் கூறுவது இதன் அடிப்படையில் தான்.

மாலை வேளையில் தான், கர்வம் கொண்ட ஹிரண்யனை நரசிம்மர் வதம் செய்தார்.

பிரதோஷ வேளையில் சிவபெருமானை வணங்கினால் தலைக்கனம், கர்வம் போன்றவை நீங்கும் என்றும், ஆணவம், கண்மம், மாயை எனும் மும்மலங்களும் நீங்கி, சிவயோகம் கிடைக்கும் என்றும் சிவபுராணங்கள் வலியுறுத்துகின்றன.

நந்தி தேவருக்கு ஏற்பட்ட தலைக்கனத்தை (கர்வம்-செருக்கு) நீக்க அவரின் தலைமேல் தாண்டவமாடினார் சிவபெருமான்.

யமுனை நதியின் தலைவன் என கர்வம் கொண்ட காளிங்கன் எனும் நாகத்தின் தலை மீது தாண்டவமாடி தண்டித்தார் கிருஷ்ணன்.

நல்ல பக்தியும், நன்னெறியும், நல்லெண்ணமும், நன்னடத்தையும் கொண்டிருந்தால் மட்டுமே இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்பதற்கு உதாரண புராணங்களாக மேற்கண்டவை விளங்குகின்றன.

ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் :

தேவர்கள் ஆலகால விஷத்திற்கு அஞ்சி, கைலாய மலையை இங்கும் அங்கும் ஓடி, இறைவனைச் சரணடைந்து நற்கதியைப் பெற்ற வழிமுறைதான் - ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் என்று கூறப்படுகின்றது.

நிலையாக இருக்கும் சிவனை, நாம் வழிபடும் வலம் வரும் முறை, செயல் சக்தியாகச் செய்யும் போது, சக்தி தேவிக்குரிய திரிசூல வடிவம் வருவதைக் காணலாம். சிவனையும், சக்தியையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான வழிபாட்டு முறை ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்.

பிரதோஷ வேளையில் ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் அளவற்ற பலனைத் தரும். ஸத்புத்ர சந்தானம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளமாகும்.

ஸோமஸூக்த பிரதக்ஷிணம் என்பதை மிக எளிய வகையில் செய்ய ஒரு உபாயம் உண்டு.

ந ச ந கோ

ந ச கோ

ந ச ந

மேற்கண்ட குறியீடுகளை ஞாபகம் கொண்டு எளிதில் வலம் வரலாம்.

ந - நந்தி

ச - சண்டிகேஸ்வரர்

கோ - கோமுகி எனும் ஆலயக் கருவறையிலிருந்து அபிஷேகத் தீர்த்தம் விழும் இடம்.

*பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :*

1. செல்வங்கள் பெருகும்.

2. கடன் தொல்லைகள் நீங்கும்,

3. நோய்கள் அகலும்

4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.

5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.

6. வேண்டிய வரம் கிட்டும்.

7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.

8. நீடித்த ஆயுள் கிட்டும்.

9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்,

ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்,

சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது சனி மஹா பிரதோஷம் எனவும்,

திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

நந்தியம்பெருமானுக்கேயுரிய சில சிறப்பு தலங்கள் :

நந்தி கொம்பு ஒடிந்த ஸ்தலம் - திருவெண்பாக்கம்

ஈசனோடு நந்தி இணைந்த உருவ ஸ்தலம் - திருக்கூடலையாத்தூர், பவானி

நந்தி விலகிய ஸ்தலம் - திருப்புங்கூர், பட்டீஸ்வரம், திருப்பூவனம், திருப்பூந்துருத்தி

நந்தி நின்ற ஸ்தலம் - திருமால்பேரு

நந்தி திருமண ஸ்தலம் - திருமழபாடி

நந்தி பிரதோஷ ஸ்தலம் - திருஅரிசிலி

நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல், திரும்பியவாறு கோபுரம் நோக்கிய ஸ்தலம் - திருவோத்தூர், திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.

பிரதோஷ காலத்தில், பூஜைகள் நடைபெறும் சமயத்தில், பன்னிரு திருமுறைகளில் உள்ள, அமிர்தம் கடைதல் தொடர்பான, பதிகங்களை படித்தலும் கேட்டலும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது. குறிப்பாக, சிவபுராணத்தினை (நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க ..) வாசிப்பதும், கேட்பதும் நற்பலன்களை அளிக்கக் கூடியது.

பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் மிக அரிய - மிகப் பழமையான நூலாகிய ஸ்காந்த புராணத்தில் சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள் உள்ளன...

பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்கி நலங்களை நாளும் பெறுவோம் !