Wednesday, 17 March 2021

அன்னாபிஷேகம்


ஈசனுக்கு அபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணலாமா?

`அன்னம் பர பிரம்மம்’ என்று கூறி, உணவை இறைவனாகப் பாவிப்பது நம் இந்து தர்மம். உடலை வளர்ப்பது மட்டுமல்லாமல் உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம்தான். கல்லினுள் வாழும் தேரை முதல் கர்ப்பப்பையில் வளரும் உயிர்வரை அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பவன் ஈசன். அதனால் அன்னத்தைப் பற்றி `அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ’ என்று சாமவேதத்தில் குறிப்பிடப்படுகிறது. `எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருக்கிறான்' என்பதே இதன் பொருள். அன்னம்தான் உலகில் வாழும் உயிர்களுக்கு அடிப்படை. உயிர்களைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் அவை உண்பதற்கான இரையையும் படைத்தருளிய இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினமான எல்லா சிவாலயங்களிலும் `அன்னாபிஷேகம்' கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாதப் பௌர்ணமி தினத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான். ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தின்போது சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வந்து அதிகப் பொலிவுடன் தோன்றுவான். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு! நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

இது மட்டும்தான் காரணமா என்றால் அதுதான் இல்லை. வேறொரு காரணமும் இருக்கிறது. சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் அது.

பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிடுவார். துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையைக் கவ்விக்கொள்ள, அவரை ’பிரம்மஹத்தி தோஷம்’ தொற்றிக்கொள்ளும். சிவபெருமான் தனது சுயத்தை இழந்துவிடுவார். கையைக் கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலமே பிச்சைப் பாத்திரமாக மாறிவிடும். யார் பிச்சையிடும்போது இந்தக் கபாலம் அன்னத்தினால் நிறைகிறதோ அப்போது அந்தக் கபாலம் சிவபெருமானின் கையை விட்டுப் பிரியும் என்பது விதி. சிவபெருமான் காசிக்குச் செல்லும்போது அன்னபூரணி அன்னமிடுகிறாள். அவளது அன்பினால் கபாலம் அன்னத்தினால் நிறைய, பிரம்மனின் தலை சிவபெருமானைவிட்டு விலகும். சிவபெருமானும் பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டு மாயையிலிருந்தும் விலகுவார். அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம் ஐப்பசி மாத பௌர்ணமி. 

அதனால்தான் சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்விக்கப்படுகிறது. அம்பிகைபாகனான சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருள்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அவை தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் ஆகியன. இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகமே. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தைக் கொஞ்சம்கூட வீணாக்கலாகாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக்காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அன்னாபிஷேகம் செய்யும் முறை

வடித்து சற்றே ஆறவைக்கப்பட்ட அன்னத்தைக் கொண்டு சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைத்து, அதன் மேலாக காய்,கனி வகைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். இந்த வேளையில் யஜூர் வேதம், ருத்ரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணம் நடைபெறும். 

லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னத்தை எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கரைப்பார்கள். நீர் வாழ் உயிர்களுக்கு உணவு. நல்ல அதிர்வுகளும் உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் மேல் பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

`சோறுதான் சொக்கநாதர்',  'சோறுகண்ட இடம் சொர்க்கம்' என்று இன்றும் மக்கள் சொல்வதுண்டு. நாம் உண்ணும் அன்னமே ஆண்டவன். அவனே அன்னத்தின் வடிவில் இருக்கிறான். அவனே நமக்குப் படியளப்பவன். எனவே இறைவனுக்கு அன்னாபிஷேகம் என்பது நாம் அவனுக்குச் செலுத்தும் நன்றிக்கடன்.

அன்னாபிஷேகத்தைப் பற்றியும் அதன் மகிமைகளைப் பற்றியும் விவரிக்கிறார் சங்கரன்கோவில் சிவராஜபட்டர்.

“உணவளித்து நம்மை வாழவைக்கும் ஈசனுக்கு நன்றிக்கடனாக அன்னாபிஷேகத்தைச் செய்கிறோம். வானவியல் சாஸ்திரத்தின்படி துலா மாத பௌர்ணமி தினத்தின்போதுதான் சந்திரன் அதிகப் பொலிவாகத் தோன்றுவான். சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி. அதனால் சந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. கலியுகத்தில் முக்தி பெறும் வழிகளில் முதன்மையானது பக்தியும் அன்னமிடுதலும் ஆகும். அன்னம் ஒடுங்கினால் சகலமும் ஒடுங்கிவிடும். ஈசனே அன்னத்தின் வடிவில் அருள்புரிகிறார். ஈசன் இல்லாமல் எதுவும் இல்லை. அதனால், ஈசனுக்கு பக்தியுடன் அன்னாபிஷேகம் செய்வதன் மூலம் முக்தியைப் பெற முடியும். ஈசனுக்கு  அன்னாபிஷேகம் செய்யப்படும் உணவை அப்படியே உண்ணக்கூடாது. தயிரோ அல்லது வெண்ணெயோ கலந்துதான் சாப்பிட வேண்டும். அன்னாபிஷேக வைபவத்தை தரிசித்தால், வாழ்வில் உணவுப் பஞ்சமே ஏற்படாது. எந்தவித தோஷங்களும் நெருங்காது. அனைத்து விதமான வளமும் பெருகும்.

திருச்சிற்றம்பலம் 
ஓம் நமசிவாய 


பஞ்ச பூத தலங்கள் :


1.திருஆரூா் - பிருதிவி (நிலம்) 
2.திருஆனைக்கா - அப்பு (நீா்)
3.திருஅண்ணாமலை- தேயு (தீ)
4.திருக்காளத்தி -  வாயு (வளி)
5.சிதம்பரம் -  ஆகாயம் (விண்)

 2) பஞ்ச சபைகள் :
1.திருவாலங்காடு-இரத்தினசபை
2.சிதம்பரம் - கனகசபை (பொன்னம்பலம்)
3.மதுரை - ரஜத சபை (வெள்ளியல்பலம்)
4.திருநெல்வேலி -தாமிரசபை
5.திருக்குற்றாலம் - சித்திரசபை

3) சோழநாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள் ஒரே நாளில் தாிசிக்க வேண்டியவை :
1.முல்லைவனம் - திருக்கருகாவூா் -      (உஷக்காலதாிசனம்)
2.  பாதிாிவனம்       திருஅவளிவநல்லூா் -
 (காலசந்தி தாிசனம்)
 3. வன்னிவனம் - திருஅரதைபெரும்பாழி அாித்துவாரமங்கலம் -
(உச்சிகால தாிசனம்)
4. பூளைவனம் -திருஇரும்பூளை ஆலங்குடி (சாயரட்சை தாிசனம்).
5.வில்வவனம் _திருக்கொள்ளம்பூதூா் (அா்த்தசாம தாிசனம்).

4) தொண்டை நாட்டுப் பஞ்சாரணியத் தலங்கள் :
 1.பதாி காரணியம்  (இலந்தைக்காடு) - திருவெண்பாக்கம்.
 2.வம்சாரணியம் (மூங்கிற்காடு) - 
திருப்பாசூா்.
 3.வடவாரணியம் (ஆலங்காடு) - 
திருவாலங்காடு.
 4.வீகஷாரணியம் (ஈக்காடு) - திருவெவ்வுளூா்.
 5.நைமிசாரணியம் (தருப்பை) கூவம் (திருவிற்கோலம்).

5) புலியூா் என அழைக்கப்படும் தலங்கள் ஐந்து  (வியாக்கிரபாதாிஷி பூஜித்த தலங்கள்) 
1.பெரும்பற்றப்புலியூா் - சிதம்பரம்.
2.திருப்பாதிாிப்புலியூா் - கடலூா்.
3.ஓமாம் புலியூா்.
4.எருக்கத்தம் புலியூா். (ராஜேந்திரபட்டினம்)
5பெரும்புலியூா்.

Tuesday, 10 January 2017

ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேர அட்டவணையுடன் வழிதடங்கள் !!!


ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன.

கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

*1), திங்களூர் (சந்திரன்):*

தரிசனம் நேரம் :1மணி நேரம்
காலை 6மணி

ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான்.

நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும்.

பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.

*2), ஆலங்குடி (குரு) :*

தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 7.30மணி

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம்.

பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

*3), திருநாகேஸ்வரம் (ராகு) :*

தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 9.30

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும்.

நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்.

பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

*4), சூரியனார் கோவில் (சூரியன்) :*

தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 11.00மணி

நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம்.

சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது.

இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

*5), கஞ்சனூர் (சுக்கிரன்) :*

தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 12.15

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம்.

எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும்.

அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

*6), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*

தரிசனம் நேரம் :1மணி நேரம்
மாலை 4மணி

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும்.

எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.

மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

*7), திருவெண்காடு (புதன்) :*

தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 5.15மணி

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும்.

பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*

தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 6.15மணி

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.

ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.

45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

*9), திருநள்ளாறு (சனி) :*

தரிசனம் நேரம்:1மணி நேரம்
இரவு 8.00மணி

நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம்.

கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் சென்றால் 8.00மணி
கெல்லாம் அடைந்து விட முடியும்.

அதன் பின்னர்
ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்...

👌👌👌🙏🙏🙏🙏👌👌👌

Wednesday, 21 December 2016

சிவாலயங்களை வழிபட வேண்டிய முறைகள்

1. நீராடி தூய ஆடை உடுத்தித் திருநீறு அணிந்து முடிந்தால் ருத்ராட்சமும் அணிந்து செல்ல வேண்டும்.

2. மலர், தேங்காய், பழம், பூ, சூடம் ஆகிய இவற்றுள் அவரவர் வசதிக்கேற்ப இயன்றவைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

3. கோபுரத்தைக் கண்டவுடன் இரு கைகூப்பி வணங்க வேண்டும்.

4. நமச்சிவாய ஐந்தெழுத்தை மனதில் ஜபித்தவாறே செல்ல வேண்டும்.

5. தல விநாயகரைத் தரிசித்துக குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.

6. பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிச் செல்ல வேண்டும்.

7. உள்ளே மூலமூர்த்தியை வணங்கிச் சுற்றிலுமுள்ள உற்சவ மூர்த்திகளையும் சண்டேசுவரரையும், பிற சந்நிதிகளையும் வணங்க வேண்டும்.

8. திருநீற்றினை இருகையால் பணிவுடன் பெற்றுக்கீழே சிந்தாது அணிந்து கொள்ள வேண்டும்.

9. ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வர வேண்டும்.

10. தரிசிக்கும் காலத்தில் சந்நிதிகளுக்கு ஏற்ப துதிப் பாடல்களைச் சொல்லி வழிபடுதல் வேண்டும்.

11. வெளியே வந்து கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்க வேண்டும்.

12. சிறிது நேரம் அமர்ந்து அவரவர் நிலைக்கேற்ப தியானம் செய்து பின் அங்கிருந்து புறப்பட்டுச் சிவ சிந்தனையோடு செல்ல வேண்டும்.
[11/26, 1:43 AM] ‪+91 97893 99378‬: சிவ வணக்கம் முத்து அய்யா.

இந்த புலனம் "உலகிற்கு சைவத்தை அறிவித்து அனைவரும் சிவத்தை அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கோடு அவன் அருளால் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இதில் அனைத்து அடியார்களின் சைவ பதிவுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அய்யா.

தாராளமாக அனைத்து அடியார் பெருமக்களும்  தாங்கள் சைவ கருத்துகளை பதிவிடலாம் அனுமதி தேவை இல்லை.

"அடியார் பெருமக்களுக்காவே புலனம்"

சிவ சிவ

Sunday, 18 December 2016

அண்ணாமலை

​அண்ணாமலையாரும் அறியாத செய்திகளும்​

​ஆமாம் பினை வந்து அணையும் சாரல் அண்ணாமலை​ என்று நம் சம்பந்தப் பெருமான் குறித்தருளும் திருவண்ணமலை, உலகின் தொண்மை வாய்ந்த நகரங்களில் ஒன்று

​நினைத்து தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர் உறைகோயில்​ என்று தேவரம் குறிக்கும் அண்ணாமலையார்  நாம் உய்யும் வண்ணம் சன்னதி கொண்டுள்ள தலம் இது

​சோணசைலம், சோணகிரி, சோணாசலம், அருணாசலம், அருணகிரி, அருணை​ உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படும் இத்தலத்தில் ​சிவகங்கை, உத்தரதீ்த்தம், சக்கரதீர்த்தம், பிரம்மதீர்த்தம் ஆகிய தீர்த்தங்களுடன் கிரிவலப்பாதையிலும் நகரிலுமாக 360 தீர்த்தங்கள்​ அமைந்துள்ளன

மகாபாரதம், இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களிலும் ஸ்காந்தபுராணம் உள்ளிட்ட வடமொழி புராணங்களிலும் ​மணிமேகலை சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல சங்கத்தமிழ் நூல்களிலும்​ அருணையம்பதியின் மாண்பு பேசப்பட்டுள்ளது

​ஆறு பிரகாரங்கள் என்னும் சுற்றுப்பாதைகளையும், ஒன்பது கோபுரங்களையும்​ கொண்டு இருபத்து நான்கு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து ஈடும் எடுப்புமாக காட்சி அளிக்கும் ஒரே சிவாலயம் திருவண்ணாமலை

​பதினோறு நிலைகளுடன் 217 அடி உயரம் உள்ள இவ்வாலயத்தின் இராஜகோபுரம் கிபி 1516 ஆம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்ட​
இக்கோபுரம் காண்போர் விழிவிரியும் வண்ணம் உயர்ந்து நிற்கும் அழகை சொல்லால் வடித்து சொல்லவும் கூடுமோ?!

​147 சிற்றாலயங்கள், 22 விநாயகர் சன்னதிகள், 306 மண்டபங்கள், 43 செப்புத்திருமேணிகள், 119 படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகள்​ என எண்ணிலிச் சிறப்புகளை பெற்ற கோயில் அண்ணாமலையார் கோயில்

ஐம்பூதங்களில் நெருப்பு தலமாகவும் ஆறு ஆதரங்களில் மணிப்பூரகத் தலமாகவும் நினைக்க முக்தி தரும் தலமாகவும் 22 நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்றாகவும் விளங்குவது திருவண்ணாமலை

இங்கு மலையே லிங்கம், மலையே சிவம்🙏🏻
​கடல் மட்டத்தில் இருந்து 2668 அடி உயரத்தில் கொடுமுடியை கொண்ட திருவண்ணாமலை ஐந்து சிகரங்களை கொண்டது​

பாக்கர் என்னும் மேலைநாட்டு அறிஞர் ​இம்மலை பலகாலங்களுக்கு முன்பு பெரும் நெருப்பு உருவமாக இருந்துள்ளது​ என்று ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்

பால் பிரண்டன் என்னும் அறிஞர் லெமூரிய கண்ட நிலப்பரப்போடு ஒப்பிடத்தக்க பழமை வாய்ந்தது திருவண்ணாமலை என்கிறார்

கார்பன் ஆய்வின் படி கணித்ததில் இம்மலையின் வயது ​260 கோடி ஆண்டுகளாக இருக்கலாம்​ என்னும் நவீன அறிவியல்

பல காலங்களுக்கு முன்பு தீமலையாக இருந்திருக்கலாம் இதன் குழம்பிலிருந்து தக்காண பீடபூமி உண்டாயிருக்கலாம் என்றும் கூறுகிறது

நவீனம் எரிமலை என்று கண்ணை மூடிக்கொண்டு கணக்கு போட  ​கோள்நாக அணையானும் குளிர் தாமரையானும் காணார் கழல் ஏத்த கனலாய் ஓங்கினான்​ என்று பாடி இறைவன் தீயாக நின்றதை நினைவுக் கூறுகிறார் நம் சம்பந்த பெருமான்

​பூவார் மலர் கொண்டு​ எனத்துவங்கும் பதிகத்தில் அண்ணாமலையின் ஏழாம் நூற்றாண்டு காட்சியை அழகுற விளக்குவார் புகலிவேந்தர்

மலையின் மீது ​குகை நமசசிவாயர் ஆலயம், விருபாஷி குகை, கந்தாஸ்ரமம், உண்ணாமுலையம்மன் முலைப்பால் தீர்த்தம், ஆலமரக்குகை, சடைச்சமிகள் குகை​ ஆகியன தரிசிக்க வேண்டிய புண்ணிய இடங்கள்

​மலைவலம் வருதல் மிகச்சிறந்த வழிபாடு​ இன்று அடியார்கள் கிரிவலம் வரும் பதினான்கு கிமீ பாதை பாண்டியர்களின் காலத்தில் செப்பனிடப் பட்டதால் அதற்கு ​விக்கிரம பாண்டியன் ஏழாம் வீதி​ என்று பெயர்

இன்று பலரும் நடந்தே மலைவலம் வருகிறார்கள் என்றாலும் மலையை ​அங்க பிரதட்சினம், அடிப்பிரதட்சினம், தவழ் பிரதட்சினம், சர்வாங்க சரீர பிரதட்சினம், வழுவு பிரட்டு பிரதட்சினம், அடிதாண்டு பிரதட்சினம்​ என்கிற வகையிலும் மலைவலம் வந்துள்ளனர் முந்தய நூற்றாண்டு மக்கள்
அண்ணாமலையார் சன்னதிக்கு நேர்பின்னே மலையின் பின்பு இருக்கும் சன்னதி ​திருநேர் அண்ணாமலை​ எனப்படும்

கிரிவலப்பாதையில் ​கௌதம முனிவர் ஆசிரமத்தின் எதிரில் இருந்து பார்த்தால் மலையின் மூன்று சிகரங்களை ஒரு சேர பார்க்கலாம்​ திரிமூர்த்தி தரிசனம் என்னும் இவ்விடத்தில் மண்டியிட்டு வணங்க வேண்டும்

கிரவலபாதையில் இருக்கும் ​அடி அண்ணாமலை​ என்னும் இடம் உண்மையில் அணி அண்ணாமலை ஆகும். இவ்விடத்தில் இருந்து பார்த்தால் மலையின் ஐந்து சிகரங்களையும் ஒருசேர காணலாம்

இறைவனின் ஐந்து முகதரிசனமாக காட்சி தரும் மலையை இவ்விடத்தில் விழுந்து வணங்க வேண்டும்

அட்ட திக்கு பாலகர்கள் வழிபட்ட லிங்கங்கள், பதினாறு விநாயகர் சன்னதிகள் பதினேழு முருகன் சன்னதிகள், பாத மண்டபங்கள் இரண்டு நந்தி மண்டபங்கள் எட்டு உள்ளிட்ட கணக்கிலடங்கா புண்ணிய கோயில்களும் கிரிவலப் பாதையில் உண்டு

​சமயக்குரவர்கள் நால்வரும் பாடிப்பரவிய திருவண்ணாமலையில்​  அருணகிரிநாதர், சேஷாத்ரி நாதர், குகை நமசிவாயர், குரு நமசிவாயர், தேசிக பரமர், அம்மணி அம்மாள், விருபாட்சி முனிவர், பாணிபாத்திரர், இரமணர், நாராயணகுரு, விசிறி சுவாமிகள் உள்ளிட்ட எண்ணற்ற அருளாளர்கள் வழ்ந்துள்ளனர்

ஆலயத்தில் சித்திரை மாதம் பவுர்ணமி பிரம்மோற்சவம் பங்குனி திருக்கல்யாணம், மாசி வல்லாளன் திருவிழா கார்த்திகை தீபத்திருவிழா திருவெம்பாவை திருவிழா திருவூடல் திருவிழா ஆகியன கொண்டாடப் படுகின்றன

​அபித குஜாம்பாள்​ என்னும் ​உண்ணாமுலையம்மன்​ தனிசன்னதி கிபி பனிரென்டாம் நூற்றாண்டில் எடுக்கப் பெற்றது
​உண்ணாமுலை நாச்சியார் காமக்கோட்டம்​ என்று இவ்வாலயத்தை கல்வெட்டுகள் குறிக்கின்றன

கோயில் வரவு செலவுகளுக்கு, பூசைகளுக்கு என நிலம் பொன் கால்நடைகள் வழங்கிய ஏராளமான சோழர் கல்வெட்டுகள் இங்கு உண்டு புகழ்பெற்ற அனைத்து சோழ மன்னர்களின் நேரடி கல்வெட்டுகளையும் இவ்வாலயம் கொண்டுள்ளது, தவிர பல்லவர், பாண்டியர், விஜயநகரர், நாயக்க மன்னர்களின் கல்வெட்டுகளும், ஊர் சபையோர் வேளாளர் வணிகர் குழுக்களின் நிவந்த கல்வெட்டுகளையும் கொண்டுள்ளது

​மதுராந்தக சோழ வளநாட்டு பெண்ணை வடகரை திருவண்ணாமலை​ என்றும் ​இராஜராஜ சோழவள நாட்டு வானக்கோப்பாடி பெண்ணை வடகரை அண்ணா நாட்டு அண்ணாமலை​ என்று கல்வெட்டுகள் இவ்வூரை பலவாறு குறிக்கின்றன

வீரராகவன் மதில் என்பது போன்ற பல புதிய பெயர்களை உடைய மதில்கள், பிரமநாயகன் என்பது போன்ற பல மடங்களும் இருந்துள்ளன

பல்லவ குல அரசி ஒருவர் எடுத்த ​நங்கையாழ்வார் ஈஸ்வரம்​ என்னும் கோயிலை கல்வெட்டுகள் அடையாளம் காட்டுகின்றன

மங்கையற்கரசியார் என்னும் பெண் தன் நகைகளை விற்று திருக்குளம் தூர்வாரிய செய்தி நம்மை நெகிழ வைக்கிறது

ஆலயத்தின் மிகமுக்கிய உற்சவமான கார்த்திகை திருநாளில் மலையின் மீது ​3500 கிலோ நெய்யில் ஆயிரம் மீட்டர் நீளம் உள்ள திரி கொண்டு​ தீபம் ஏற்றப்படும் இத்தீப நெய்யை ஆலயத்தின் கோசாலையில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் பெறுகிறார்கள்

தீபத்திருவிழாவின் கொடித்துணியும் தீபத்தின் திரித்துணியும் பர்வதராஜ குலத்தினரே தருகிறார்கள் மலையில் தீபம் ஏற்றும் உரிமையும் அவர்களுக்கே

கார்த்திகை தீபத்தில் சிவதரிசனம் செய்த பின்னர்தான் திருவண்ணாமலை வாழ் மக்கள் அவரவர் வீடுகளில் மின்விளக்குக் கூட போடுவார்கள்

எத்தனை காற்று மழை அடித்தாலும் பதினோறு நாட்கள் விடாமல் எரியும் தீபத்தை சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் பார்க்கும் ஆனந்தத்தை சொல்லால் வடிக்கவும் இயலுமோ?!

கிபி 1745 ஆம் ஆண்டு மைசூர் சமஸ்தானத்தின் அமைச்சர் வெங்கடப்ப ராயர் என்பவர்தான் இன்று மலைமேல் உள்ள தீபக்கொப்பரையை வழங்கியவர்

பதினோறு நாட்கள் கழித்து கொப்பரை கீழிறக்கப் பட்டு அதில் உள்ள தீபக்கரியை ஆலயத்தில் சேகரித்து வைத்துக் கொண்டு பின்  மார்கழி திருவாதிரையில் இருந்து பிரசாதமாக கொடுப்பார்கள்

தொட்டாலே நெய்மணக்கும் அந்த தீபக்கரியை நெற்றியில் இட்டு மகிழ்ந்து சிவானந்த வெள்ளத்தில் திளைக்கலாம்

திருவண்ணாமலை குறித்து திரட்டிய தகவல்களில் கால்பகுதியே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது, அதன் பெருமையை முழுதாக சொல்லவும் முடியாது இன்று
ஆதலால் சொல்லுவோம்

​அண்ணாமலைக்கு அரோகரா​ என்று...

சிவாயநம🙏🏻🙂

Thursday, 1 December 2016

திருவண்ணாமலை

260 கோடி வயது:

திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள்.

அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.

இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்:

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள்.

இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

தீபதரிசன மண்டபம்:

அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது.

மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார்.

இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர்.

இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

கரும்புத்தொட்டில்:

அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில்.

குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர்.

தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள்.

இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆறுவிரல் ஆறுமுகம்:

திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது.

அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார்.

அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்:

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்!

இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள்.

இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

மீனின் பெயர் செல்லாக்காசு:

திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர்.

இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து.

இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா!

இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி!

அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

தங்கமலை ரகசியம்:

அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு.

ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு.

இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது.

இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது.

கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில்மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

கிரிவலம் செய்யும் முறை:

திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது.

மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது.

கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது.

இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும்.

மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும்.

இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும்.

மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும்.

தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

நந்திக்கு பெருமை:

மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும்.

அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.

அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார்.

தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள்.

அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும்.

பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

செந்தூர விநாயகர்:

ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம்.

ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர்.

சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார்.

இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.